CM Joseph Vijay: முதல்ல நான் உங்க விஜய்.. முதலமைச்சர் எல்லாம் அப்புறம் தான்.. இயக்குநர் விக்ரமன் நெகிழ்ச்சி!
வழக்கமாக முதலமைச்சரை பார்க்க போகும்போது பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருக்கும். ஆனால் இங்கு எதுவும் இல்லை. நானும் என் மகனும் தான் விஜயைப் பார்க்க சென்றிருந்தோம் என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

நான் பெரிய பதவியில் இருந்தாலும் என்றைக்கும் உங்கள் விஜய் தான் என தன்னிடம் முதலமைச்சர் விஜய் சொன்னதாக இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்தேன். மதியம் 12 மணிக்கு தான் எனக்கு போன் வந்தது. 1.45 மணிக்கு முதலமைச்சர் அப்பாயின்மென்ட் இருக்கு. அவரை பார்க்கலாம் என கூறினார்கள். சரியான நேரத்துக்கு நான் செல்ல ஒரு 5 நிமிடம் காரில் உட்காருங்கள். முதலமைச்சர் உங்களிடம் தனியாக சில விஷயங்கள் பேசணும் சொல்கிறார் என அவரின் உதவியாளர் தெரிவித்திருந்தார். நானும் காரில் காத்திருந்தேன்.
வழக்கமாக முதலமைச்சரை பார்க்க போகும்போது பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருக்கும். ஆனால் இங்கு எதுவும் இல்லை. நானும் என் மகனும் தான் விஜயைப் பார்க்க சென்றிருந்தோம். அதேபோல் முதலமைச்சர் அறை என்றால் நிச்சயம் உதவியாளர் தொடங்கி அதிகாரிகள் வரை இருப்பார்கள். அங்கு யாருமே இல்லை. பெர்சனலாக பேச வேண்டும் என சொன்னது போல அங்கு முதலமைச்சர் விஜய் மட்டும் தான் அமர்ந்திருந்தார்.
View this post on Instagram
என்னைப் பார்த்ததும் இரு கையையும் நீட்டி சிரித்துக் கொண்டே சார்... என அழைத்தார். நானும், என் மகனும் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தோம். என் மகனிடம் ப்ரோ எப்படி இருக்கிங்க என சிரித்துக் கொண்டே கேட்டார். உண்மையில் என்னுடன் தனியாக பேச வேண்டும் என அவர் நினைத்ததை நான் புரிந்துக் கொண்டேன்.
திரைத்துறை சார்ந்த பல பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் நான் தெரிவித்தேன். முதல்முறை சந்திப்பிலேயே அபப்டி சொல்லியிருக்கக்கூடாது என நினைக்கிறேன். பெஃப்சி தொழிலாளர்கள் சிரமப்படுவது பற்றியும், உதவி இயக்குநர்கள் கஷ்டம் பற்றியும், திரைப்பட நகர் அமைக்க வேண்டும் என பல விஷயங்கள் கூறினேன். விஜய் தன் உதவியாளரிடம் எல்லா விஷயங்களை கேட்டு எழுதி வாங்க சொன்னார். என்னால் முடிந்ததை நிச்சயம் செய்து தருகிறேன் எனவும் தெரிவித்தார்.
என் மகனிடம் சகஜமாக பேசி அடுத்தப்படம் பற்றியெல்லாம் விசாரித்தார். பின் நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். சார் நான் உங்கள் விஜய் தான். எப்போது, எதுக்கு வேண்டுமானாலும் என்னை அழையுங்கள். சிரமப்படுத்துகிறோம் என தயங்க வேண்டாம் என தெரிவிக்க எனக்கு கண் கலங்கி விட்டது. ஒரு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் என் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருந்தது” என விக்ரமன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















