Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி திரையரங்கில் தான் ஒரு குழந்தையாக மாறி குதூகலித்ததாக கூறியுள்ளார்

சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல். உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர்.
கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது.
அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் ராஜமெளலி விமர்சனம்
காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக எஸ்.எஸ். ராஜமெளலி கூறினார். ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ’அவதார்’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்ற நினைவுகளை பகிர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி, பெரிய திரை அனுபவங்களுக்கு ’அவதார்’ திரைப்படம் ஒரு மைல்கல் என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.
ராஜமெளலி படத்தின் பணியாற்ற விருப்பம் தெரிவித்த ஜேம்ஸ் கேமரூன்
இந்த உரையாடலின்போது ராஜமெளலி தற்போது இயக்கி வரும் வாரனாசி படம் குறித்து ஜேம்ஸ் கேமரூமன் பேசினார். அப்போது " புலிகளுடன் ஏதாவது காட்சி எடுக்கிறீர்கள் என்றால் என்னிடம் சொல்லுங்கள். என் கையில் ஒரு கேமராவை கொடுங்கள் நான் இரண்டாம் நிலை உதவி இயக்குநராக வேலை செய்து உங்களுக்கு சில காட்சிகளை எடுத்து தருகிறேன்' என ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறினார்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு இந்திய படங்களின் ஃபிலிம் செட்டை பார்வையிடும் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 19 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.





















