Actor Vijay: 'விஜய்க்கும் எனக்கும் பிரச்சினைக்கு காரணம் இதுதான்..' மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!
வாரிசு படம் பார்த்த பலரும், அப்பா - மகன் இடையேயான பல காட்சிகளில் விஜய் - எஸ்.ஏ.சி தான் இருவரும் தான் நினைவில் வந்ததாக பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் விஜய்யை இன்னும் தான் குழந்தையாகவே பார்ப்பதாக நேர்காணல் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அப்பா -மகன் பாசம்:
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் கதை அப்பா - மகன் இடையேயான உறவை வைத்து எடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக விஜய்க்கும், அவரது அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனாலும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
View this post on Instagram
இன்னும் குழந்தைதான்:
இதனிடையே வாரிசு படம் பார்த்த பலரும், அப்பா - மகன் இடையேயான பல காட்சிகளில் விஜய் - எஸ்.ஏ.சி தான் இருவரும் தான் நினைவில் வந்ததாக பகிர்ந்து கொண்டனர். இதனால் தான் விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வியும் எழுப்பினர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பற்றிய பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதில், “விஜய்க்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அவர் ஒவ்வொரு முறையும் மேடை ஏறும் போது எதைப் பற்றி பேசப்போகிறார் என ஆண்டு முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நானும் எப்போதும் விஜய்யை விட்டுக் கொடுத்ததில்லை. இப்ப வரைக்கும் நான் இன்னும் அவரை 5 வயது குழந்தையாகவே பார்க்கிறேன். பொதுவாக மகன்களுக்கு அப்பாவை விட அம்மாவை அதிகம் பிடிக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய்க்கு என்னை அதிகம் பிடிக்கும்.
பிரச்சினைக்கு காரணம் என்ன?
நாங்கள் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். எங்களின் அன்பை இருவரும் அறிவோம். என்னுடைய பலவீனமே அவர் தளபதியாக உயர்ந்தாலும், இன்னும் அவரை 5 வயது குழந்தையாக பார்ப்பது தான். அந்த வயசுல ஹோம் ஒர்க் பண்ணலைன்னு ஸ்கேல் வச்சு அடிப்பேன். அந்த இடமே சிவந்து போகும். உடனே எண்ணெய் போட்டு சரி பண்ணுவேன். விஜய்யை ரொம்ப நேசித்ததால் எங்கள் இருவருக்குமே பிரச்சினை ஏற்பட்டதோ தெரியவில்லை” என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் ”என்னோட லைஃப்ல முதல்ல சினிமா, அடுத்து விஜய், அதன் பிறகு தான் என் மனைவி ஷோபாவே அப்படித்தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.