தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
அரியலூரில் வங்கிக் கடன் தவணையை திரும்பி செலுத்தாத விவசாயியை, தனியார் வங்கி ஊழியர்கள் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியதால், விவசாயி மன உளைச்சலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி என்று கிராமம் உள்ளது. இங்கு மேட்டுத் தெருவில் வசிக்கும் விவசாயி கோவிந்தராஜ்.
இவருக்கு கமலா என்ற மனைவியும், கல்லூரி படிக்கும் மகனும், 11-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இவர் கடந்த ஜனவரி மாதம், ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் 11,958 ரூபாய் தவணை தொகையாக செலுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் குடும்ப சூழல் காரணமாக கடந்த மாதம் வங்கித் தவணைத் தொகையை செலுத்த தாமதமானதாகக் கூறப்படுகிறது.
இதனால், தனியார் வங்கி வசூல் ஏஜெண்டுகள் சிலர் கோவிந்தராஜை மேட்டுத்தெருவிலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் கோவிந்தராஜ் கடைவீதிக்கு சென்றபோது அங்கும், கடனை திரும்ப செலுத்த சொல்லி பொதுவெளியில் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால், கோவிந்தராஜும் அவரது மனைவியும் கமலாவும் கடும் மன உளைச்சலுக்குள்ளானார்கள்.
இதையடுத்து, தவணை செலுத்த தேவையான பணத்தை புரட்டுவதற்காக கோவிந்தராஜின் மனைவி நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் கோவிந்தராஜ், வங்கி ஊழியர்களால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை வீடியோவாக பேசிப் பதிவு செய்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகே இருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றிய திருமானூர் காவல்துறையினர், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி ஊழியர்களின் அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















