விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரபலங்கள் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
விக்னேஷ் சிவன் பற்றி இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் பேசியபோது "நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள்
சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.
தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் . எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது. இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.
எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம் உண்மையாக நம்புவது தான் காதல். இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,
பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு. தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது. அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி." என்றார்























