NDA கூட்டணியில் இணைவது புத்திசாலித்தனம்.. தவெகவுக்கு இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. அந்த கட்சிக்கு இயக்குநர் மோஜன் ஜி அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவது புத்திசாலித்தனம் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழக அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டியாக அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக,மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏகப்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புரட்சி பாரதம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து காண்கிறது. கூட்டணிக்கு கட்சிகள் வரும் என காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தினரின் எண்ணம் இதுவரை நிறைவேறவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.
ஆட்டத்தை மாற்றப்போகும் தமிழக வெற்றிக் கழகம்
இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவரான விஜய் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் ஆட்சிக்கு வருவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர் வாக்குகளை பிரித்து நிச்சயம் தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காத நிலைக்கு சூழலை மாற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பலரும் கணித்துள்ளனர்.
இப்படியான நிலையில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக அளித்து வருகிறது. அதேசமயம் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறியது. ஆனால் இதனை தவெக தரப்பு மறுத்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில் விஜயிடம் பவன் கல்யாண் பேசியதாக வெளியான செய்தியை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெறும் 6,7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலி்ல் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட இப்படி NDA கூட்டணியில் இணைந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.. நடந்தால் மக்களுக்கு நல்லது” என கூறியுள்ளார்.























