Biggboss Julie : உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போகாத..விஜயை பேச்சை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் ஜூலி
வேலூர் தவெக மாநாட்டில் விஜய் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு பேசியதை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழக அரசியல் களத்தையும் ஜல்லிகட்டு போட்டியையும் ஒப்பிட்டு அவர் ஒரு குட்டி கதை சொன்னார். இதற்கு பிக்பாஸ் ஜூலி விமர்சனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சொன்ன குட்டி கதை
ஒரு ஊரில் ஒரு குட்டி பையன் இருந்தான். அங்கே 4 சாலைக்கு நடுவே ஜல்லிக்கட்டு காளை ஒன்று முரட்டுத்தனமாக நின்று கொண்டிருந்தது. அந்த இடம் சகஜமாக வேண்டுமெனில் அந்த காளையை அடக்க வேண்டும். அந்த காளையை அடக்க கூடியவர்கள் அப்போது ஊரில் இல்லை. கூட்டத்தில் இருந்த சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? என்று கூறினாலும் யாராலும் தொடக்கூட முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் தூக்கி வீசி விடுகிறது. அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு சின்ன பையன் உள்ளே வருகிறான். அவர்கள், ‘’டேய் எங்களாலேயே முடியவில்லை. நீ எதை கிழிக்கப் போகிறாய்?’’ என்று ஏளனமாகப் பேசுகின்றனர் மேலும் சிலர் பரிதாபப்பட்டுப் பாவம் பார்த்துக்கொண்டே பேசுகின்றனர். ஆனால் சின்னப் பையன் ரெண்டு பாக்கெட்டுகளிலும் கையை விட்டுக்கொண்டு ஸ்டைலாக, கெத்தாக, தில்லாகச் செல்கிறான். காளை முறைக்கிறது. மேலும் அருகில் செல்கிறான். காளை முட்ட வந்ததும் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த புல் கட்டைக் காண்பிக்கிறான். காளை முகம் மாறி புல்லை உண்கிறது. அழைத்துக்கொண்டு நடந்தவாறே, அருகில் வயல் வெளியில் காளையை விட்டுவிட்டு வருகிறான். அருகில் ஒரு பெரியவர் வந்து கேட்கிறார். எப்படி காளையை அடக்கினாய் என்று?
உடனே சிறுவன் சொல்கிறான். ’’ஐயா, காளை கோபமாக இருந்ததுபோலத் தெரியவில்லை. பசியாகத்தான் இருந்தது’’ என்றான். உடனே பெரியவர் சொல்கிறார். ’’யாராக இருந்தாலும் சூழலுக்கு ஏற்ற வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் விஷயம்’’. ஜல்லிக்கட்டு காளைதான் தமிழக அரசியல் களம். அந்த பெரியவர்தான் தமிழக மக்கள். தவெகதான் அந்த சின்ன பையன். முதல்வரின் போலி வாக்குறுதிகளை இனியும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
ஜூலி விமர்சனம்
ஜூலி வெளியிட்ட வீடியோவில் " ஹாய் அண்ணா நான் தான் ஜூலி. வேலூர் பரப்புரையில் நீங்கள் பேசுவதை கேட்டேன். வழக்கம் போல இந்த முறையும் ஒன்றும் இல்லை. ஜல்லிக்கட்டு பற்றி ஒரு கதை ஒன்னு சொன்னீங்க. அதை கேட்டதற்கு பிறகு என்னால் பேசாமல் இருக்க முடியல. நீங்க பாட்டுக்கு சின்ன பையன் புல்லுகட்டை காட்டி காளையை அடக்கினான் என்று சொல்லிவிட்டு போய்விடுவீர்கள். ஆனால் இதை பார்க்கும் உங்கள் கட்சி தொண்டர்களின் நிலைமையை யோசித்து பார்த்தீர்களா. ஏற்கனவே உங்க கட்சில இருக்கவங்க எல்லாம் மைனர் பசங்க. நீங்க சொன்ன கதைய கேட்டு நானும் காளைய அடக்குறேனு சொல்லிட்டு புல்லு கட்டை கொண்டு போய் நின்னு ஏதாவது ஆகிட்டா. 50 ஐ 500 ஆக்கிவிடாதீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டு போராடி ஜல்லிகட்டு நடத்த அனுமதி வாங்கி வச்சிருக்கோம். மறுபடியும் போராட எல்லாம் முடியாது. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போகாத அண்ணா" என்று ஜூலி இந்த வீடியோவில் பேசியுள்ளார்























