என்னை ஹீரோவாக வேண்டாம் என்றார்கள்.. உறுதியாக நின்ற இயக்குநர்..அர்ஜூன் தாஸ் பகிர்ந்த தகவல்
ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் தன்னை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டாம் என பல தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநரிடம் கூறியதாக நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என பல தயாரிப்பு நிறுவனங்கள் கூறியபோதும், அவர்தான் இந்தக் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் உறுதியாக இருந்ததாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பகிர்ந்த இந்தத் தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அர்ஜூன் தாஸ் வேண்டாம் என்ற தயாரிப்பாளர்கள்
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அர்ஜுன் தாஸ், இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் முதலில் படத்தின் ஒன்லைனை மட்டுமே தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். பின்னர் முழு திரைக்கதையையும் தயாரித்த இயக்குநர், பல தயாரிப்பு நிறுவனங்களிடம் கதையை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, அர்ஜுன் தாஸை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டாம் என்றும், வேறு கதாநாயகனை தேர்வு செய்யலாம் என்றும் சிலர் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
உறுதியாக இருந்த இயக்குநர்
ஆனால், ரகு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும் என்பதில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் உறுதியாக இருந்துள்ளார். தன்னை முழுமையாக நம்பி இந்தக் கதைக்காக நின்ற இயக்குநருக்கு அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்தார். ரகு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா என்று சில நேரங்களில் தனக்கே சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் இயக்குநர் தன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக மூலம் பரவலாக கவனமீர்த்தார் அர்ஜூன் தாஸ். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் , விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அநீதி, ரசவாதி , பாம்ப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான கான் சிட்டி திரைப்படம் மக்களிடையே ஓரளவு கவனமீர்த்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படம் அர்ஜூன் தாஸை ஒரு தேர்ந்த ரொமாண்டிக் ஹீரோவாகவும் மக்கள் மனதில் பதிய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















