அப்பாவின் வாழ்க்கை வரலாறு படமானால்...இப்போவே புக் செய்துவைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்
தனது தந்தை ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குவதுதான் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும் என செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எதிர்காலத்தில் திரைப்படம் உருவாக்கும் வாய்ப்பு குறித்து அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குவது தனது தனிப்பட்ட ரீதியாகவும் தனது திரை வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஸ்பெஷலான படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். ஒருபக்கம் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் இன்னொரு பக்கம் தனது சுயசரிதையை மிகத்தீவிரமாக எழுதி வருகிறார். இந்த புத்தகம் கிட்டதட்ட இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் சில தகவல்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
ரஜினி சுயசரிதை குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த்
தனது தந்தையின் சுயசரிதை குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில் " என் தந்தை தனது சுயசரிதையை எழுதி வருகிறார். இதில் நானும் நெருக்கமாக இருந்து பங்காற்றி வருகிறேன். அதன் வெளியீட்டிற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்தப் புத்தகம் உருவாகி வரும் விதத்தைப் பார்க்கும்போது, மக்கள் பல ஆண்டுகளாக வாசிக்கக்கூடிய, மீண்டும் மீண்டும் தேடிப் படிக்கக்கூடிய மற்றும் அதிலிருந்து உத்வேகம் பெறக்கூடிய ஒரு அரிய படைப்பாக அது அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, பரமஹம்ச யோகானந்தரின் 'ஒரு யோகியின் சுயசரிதை' (Autobiography of a Yogi) அத்தகையதொரு புத்தகமாகும். என் தந்தையின் பயணமும் உண்மையிலேயே அசாதாரணமானது என்பதால், அவருடைய சுயசரிதையும் அத்தகையதொரு நீடித்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.' என்றார்
ரஜினி வாழ்க்கை வரலாற்று படம் குறித்து
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குவதும் குறித்து பேசிய செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படி கூறினார் " சரியான நேரத்தில், அவருடைய வாழ்க்கை ஒரு திரைப்படமாக உருவாக்கப்படும்போது, அது எனது தனிப்பட்ட மற்றும் திரை வாழ்க்கையில் நான் மேற்கொள்ளக்கூடிய மிகச் சிறப்பான பணிகளில் ஒன்றாக அமையும்."
செளந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்தை வைத்து 2014 ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார். இந்தியாவில் முதல்முறையாக லைவ் ஆக்ஷன் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















