Actress Meena: “முதல் படம் நடிக்க மறுப்பு.. அந்த இயக்குநரோடு 8 படம் பண்ணேன்” - மீனா சொன்னது யாரை தெரியுமா?
நான் கே.எஸ்.ரவிகுமார் படம் பண்ண மாட்டேன் என சொன்னதைக் கேள்விபட்டு நிறைய பேர் என்னிடம் பரிந்துரை செய்தார்கள். நீங்க இந்த படம் பண்ணனும் என சொன்னார்கள்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நாட்டாமை படத்துக்காக தன்னை அணுகியபோது முடியாது என மறுத்து விட்டேன் என நேர்காணல் ஒன்றில் நடிகை மீனா தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.
ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மீனா, “நாட்டாமை படத்தை நான் முதலில் வேண்டாம், என்னால் நடிக்க முடியாது என தெரிவித்தேன். அதற்கு காரணமாக, என்னிடம் தேதி இல்லை. ரொம்ப பிஸியா நடிச்சிட்டு இருந்தேன். முதலில் அந்த கதையை சொல்லும்போது சரத்குமார் அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என சொன்னார்கள். அதன்பிறகு சினிமாவில் என்னுடைய சீனியர் குஷ்பூ இருந்தார். பின்னர் ஒரு இளம் ஜோடி இருப்பதாக சங்கவியை குறிப்பிட்டார்கள். இந்த கதையில் இருந்து நாம் என்ன செய்யப் போகிறோம் என நினைத்தேன்.
ஆனால் நான் கே.எஸ்.ரவிகுமார் படம் பண்ண மாட்டேன் என சொன்னதைக் கேள்விபட்டு நிறைய பேர் என்னிடம் பரிந்துரை செய்தார்கள். நீங்க இந்த படம் பண்ணனும், 20 நாட்கள் தான் கால்ஷீட், கே.எஸ்.ரவிகுமார் நம்ம கால்ஷீட்டை வீணடிக்க மாட்டாரு, சரியாக திட்டமிடுபவர் என சொன்னார்கள். அவருடன் நான் இணையும் முதல் படம் அதுதான். இருந்தாலும் என்னால் நடிக்க முடியாது தான் நான் சொன்னேன்.
Simply 🤎✨#Meena pic.twitter.com/iRpgZTqrs7
— Meena (@ActressMeena_) November 1, 2025
இப்ப கே.எஸ்.ரவிகுமார் என்னுடைய பேவரைட் இயக்குநர். முதல் படம் முடியாது என சொன்ன நான் கிட்டதட்ட 7 படம் அவர் இயக்கத்தில் நடித்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனா தனது கேரியரில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, வில்லன், பாறை, தெனாலி, நட்புக்காக படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிநேக கோஷம் உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்த தெனாலி படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.
நாட்டாமை படம் 3 ஹீரோயின்கள் இருந்தாலும் மீனாவுக்கும் அவர் கேரக்டருக்கு கதையில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் அவருக்கென “மீனாப்பொண்ணு” என்ற வரிகள் அடங்கிய பாடலும் இடம்பெற்றது.
மீனாவின் சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமா ரசிகர்களிடையே கண்ணழகி என அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். ரஜினிகாந்தின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னாளில் அவருக்கே ஜோடியாக நடித்தபோது மீனா எத்தகைய வளர்ச்சியை அடைந்திருந்தார் என்பது அனைவருக்கும் புரிந்தது. தனது நடிப்பால் பல மொழிகளிலும் கலக்கிய அவரின் மகளான நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















