Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை குறிவைத்து முதலமைச்சர் விஜய் சாட்டையை சுழற்றி வரும் நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முதல் ஆளாக ஆஜர் ஆகியுள்ளார் முன்னாள் அமைச்சர் சிவசங்கர். அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி மோசடி செய்த புகாரில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் சிவசங்கர்.
மக்கள் பணத்தை யாரையும் தொடவும் விடமாட்டோம், தொட்டா விடமாட்டேன், இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விடமாட்டோம் என சட்டப்பேரவையிலேயே எச்சரித்தார் முதலமைச்சர் விஜய். அந்தவகையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்து ஆக்ஷனில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். திமுகவினரை டார்கெட் செய்து பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் இப்படி செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய புகாரில் இளஞ்செழியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என்று தகவல் பரவிய நிலையில், அவரை யாரென்றே தனக்கு தெரியாது என்று மறுப்பு தெரிவித்தார் சிவசங்கர். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சிவசங்கருக்கு இந்த மோசடியில் பங்கு இருப்பதாகவும் அவருக்கு பணத்திலும் பங்கு கொடுத்திருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளஞ்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடியில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் கொடுத்த புகாரில் இந்த கைதும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்ப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் ஆஜராகியுள்ளார்.
தவெக அரசின் குறைகளை வலிமையாக சுட்டிக்காட்டும் நபராக திமுகவின் சிவசங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவரை வழக்கு மூலம் அச்சுறுத்தி முடக்குவதற்கு இதுபோன்ற புகார்களை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பயன்படுத்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுகவினர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















