அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
2026-27ஆம் கல்வி ஆண்டில் முன்னெடுப்பு; அரசு பள்ளி மாணவர்களை தலைவர்களாக்கும் 'மகிழ் முற்றம்' திட்டம்.

மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026- 27ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும். பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.
2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் : (House Class Leader):
ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும்.
குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி மாணவ/மாணவியர்களின் அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
இரு பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் என்ன செய்ய வேண்டும்?
மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் குழுத் தலைவர்கள் (House Captains) மற்றும் 5 மாணவ அமைச்சர்கள் (Student Ministers) இதில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றுவர்.
மேல்நிலைப் பள்ளி எனில் தேர்வு செய்யப்பட வேண்டிய வகுப்பு – 11ஆம் வகுப்பு ஆகும். உயர்நிலைப் பள்ளி எனில், 9ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நடுநிலைப் பள்ளி எனில் 8ஆம் வகுப்பு மாணவரும் தொடக்கப் பள்ளி எனில் 5ஆம் வகுப்பு மாணவரும் தேர்வு செய்யப்படுவர்.
இந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத் தலைவர் (House Captain) மற்றும் ஒரு மாணவ அமைச்சர் (Student Minister) நியமிக்கப்படுதல் வேண்டும்.
மாணவர் குழுத் தலைவர் (House Captain)
ஒவ்வொரு குழுவிற்கும் முதலில் மாணவர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். எனவே, ஒவ்வொரு குழுவிற்கும் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைத்தூக்கும் முறையிலோ ஒரு மாணவர் குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
மாணவர் அமைச்சர் (Student Minister)
ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் குழுத் தலைவர் (House Captain) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர். இருபாலரும் பயிலும் பள்ளிகளில் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணவி எனில் அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவன் நியமிக்கப்படுதல் வேண்டும். அல்லது மாணவர் குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் எனில், அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவி நியமிக்கப்படுதல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்























