17 வயசு பையன் கொலை செய்றான்..போதை அடிமைத்தனம் குறித்து மாணவர்களுக்கு சூரி அறிவுரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடிகர் சூரி கல்லூரி மாணவர்களிடையே போதையடிமைத்தனம் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என அறிவுறுத்தினார்.
காமெடியன் டூ நாயகனாக களம் மாறிய சூரி வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாமன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றது. தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் அவர் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
போதை அடிமைத்தனம் குறித்து சூரி
இந்த நிகழ்வில் பேசிய சூரி " 17 வயது பையன் கொலை செய்கிறான். இதெல்லாம் எங்க போயிட்டு இருக்கு. இதேல்லாமே போதைப் பொருட்களால்தான். பெரியளவில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. அதை நம் நாட்டிற்குள் விடலாமா? இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறீர்கள். தயவு செய்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தெரிந்துகொள்ளாதீர்கள். ஒருசில பேர் செய்யும் தவறால் நமக்கும் நம் வீட்டிற்கு நம் குடுமப்த்திற்கு நம் நாட்டிற்கு கெட்ட பெயர்தான். " என்று சூரி பேசினார்.
பல முன்னணி நடிகர்கள் போதைப் பொருட்கள் குறித்து பேசுவதற்கே தயங்கிவரும் நிலையில் சூரி இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியதை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.























