மிருகங்கள் மீது தீராத அன்பு சிங்கம் - புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இப்போது மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் அமரன் படம் தான். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலை குறிவைத்து. மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ,சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருப்பார்.
இந்தப் படம் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி என்ற படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா பாப்ரி கோஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்துள்ளார்.
பொதுவாகவே மனிதநேயம் மிக்க பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன், மிருகங்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். அந்த வகையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஷெரியார் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்துள்ளார். 3 மாதங்களுக்கு அவற்றிக்கு தேவையான பராமரிப்பு செலவுகள், உணவு உள்ளிட்ட அனைத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

