Bigg Boss Malayalam : ஒருபாலின ஜோடியை கேவலப்படுத்திய போட்டியாளர்...பொங்கி எழுந்த மோகன்லால்
பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒருபாலின தம்பதிக்கு ஆதரவாக நடிகர் மோகன்லால் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்த ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே இந்தி மற்றும் மலையாளத்தில் துவங்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மலையாளம் கடந்த வார எபிசோட் பரவலாக பேசப்பட்டு வருகிறது
ஒருபாலின தம்பதியை கொச்சைப்படுத்திய போட்டியாளர்
பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கியது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிவருகிறார். மற்ற போட்டியாளர்களுடன் இந்த சீசனில் ஆதிலா மற்றும் நூரா ஆகிய பெண் ஒருபாலின தம்பதி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளார்கள். இவர்களுடன் வைல்டு கார்டு சுற்றில் லட்சுமி மற்றும் மஸ்தானி என்கிற இரு பெண் போட்டியாளர்கள் இணைந்தார்கள்.
லட்சுமி மற்றும் மஸ்தானி பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பு வரை ஆதிலா மற்றும் நூரா மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தனர். லட்சுமி , மஸ்தானி வருகைக்குப் பின் அவர்கள் இருவரை அவமானப்படுத்தும் விதமாக பேசத் தொடங்கினர். குறிப்பாக லட்சுமி இவர்களைப் போன்றவர்களை தான் வீட்டிற்குள் கூட விடமாட்டேன் என்று சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சியில் லட்சுமியின் கருத்திற்கு மோகன்லால் கடும் எதிர்ப்பை தெரிவித்து கைதட்டல்களை பெற்றார்
பொங்கி எழுந்த மோகன்லால்
லட்சுமி மற்றும் மஸ்தானியிடம் பேசிய மோகன்லால் "ஒரு பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கி இருக்கிறது. ஆதிலா மற்றும் நூரா இருவரும் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த போட்டியில் இருப்பது தெரிந்துதானே நீங்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தீர்கள். பின் எப்படி உங்களால் சக மனிதரை தரக்குறைவாக பேச முடிந்தது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு இவர்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் இருப்பது என்றால் இருக்கலாம். இல்லையென்றால் தாராளமாக வெளியேறலாம்" என மோகன்லால் கடும் கோபத்தில் பேசினார். ஒருபாலின தம்பதிக்கு ஆதரவாக மோகன்லால் பேசியுள்ளது ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 9
பிக்பாஸ் தமிழின் சீசன் 9 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த ஆண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பல்வேறு சின்னத்திரை தொலைக்காட்சி நடிகர் , நடிகைகள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.





















