வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் 'ஆப்பு'! விழி பிதுங்கும் வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையத்தின் புதிய செக்-மேட்!
கோவில் பூஜை/ அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் தடைசெய்யப்பட்டள்ளது.

விழுப்புரம் : 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்தலைமையில் வர்த்தக சங்கங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், அடகு கடை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் அனைத்து வர்த்தக சங்கங்கள், மண்டப உரிமையாளர்கள், அடகு கடை உரிமையார்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் உணவகம் உரிமையார்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்திடும் வகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு அறிவுரைகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளபோது திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களை அரசியல் கட்சிப்பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன்விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் வாக்காளர்களுக்கு பணம்/ பரிசுப்பொருட்கள் / வேட்டி-சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைககு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும்.
மேலும், கோவில் பூஜை/ அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் தடைசெய்யப்பட்டள்ளது. இத்தகைய நிகழ்கவுகள் வாக்காளரை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் வாக்களிப்பதை வெகுவாக தடை செய்கின்றன. எனவே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற்றிட ஏதுவாக திருமண மண்டபம்/ சமுதாயக்கூட உரிமையாளர்கள் திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம் திருமண பத்திரிக்கை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்து, முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படிருப்பின் அவை குறித்த தகவல்களை உடனடியாக அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். ஏப்ரல் மாதம் 04ம் தேதி மாலை 5.00 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் எவரும் திருமண மண்டபங்களில் தங்கிட அனுமதி தரக்கூடாது. மேற்சொன்ன விதிமுறைகளின்படி சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, நற்பெயர் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில், பொதுக்கூட்டம்/விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள்/முகவர்களால் மொத்தமாக மீளத்திருப்பப்பட்டு வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை திருப்புவதற்கு எவரேனும் முற்பட்டாலோ அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்படுவது, அடகுவைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மீளத்திருப்பப்படும் போது அவை குறித்த விவரங்களை உடனடியாக அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். எனவே, தேர்தல் விதிமுறைகளின் படி சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.




















