Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம் என்று வில்லிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு நாளும் பரப்புரை தமிழ்நாட்டில் அனல் பறந்து வருகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக்மோகன் வேட்பாளராக களமிறங்குகிறார்.
அவருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,
வாக்குறுதியை காப்பாற்றிய திமுக அரசு:
நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டீர்கள். எதிர்த்துப் போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு டெபாசிட் காலியாக வேண்டும்,
யுனைடெட் இந்தியா நகரில் ரூபாய் 9 கோடி மதிப்பில் மருத்துவமனை, யுனைடெட் இந்தியா நகரில்
சிஎம்டிஏ சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பில் நவீன நூலகத்துடன் கூடிய முதல்வர் படைப்பகம், அகத்தியர் நகரில் ரூ.21.72 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டுத் திடல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள், வில்லிவாக்கம் மற்றும் பாடி மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த தொகுதிக்கு நம்முடைய முதலமைச்சர் செய்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையையும் நம் அரசு காப்பாற்றியிருக்கிறது. உதாரணத்துக்குச் சில விஷயங்களை மட்டும் இங்கு குறிப்பிடவும். நினைவூட்டவும் விரும்புகிறேன்.
கட்டணமில்லா பேருந்து:
கடந்த முறை நம் தேர்தல் வாக்குறுதியில் சொன்னோம் ஆட்சிக்கு வந்தவுடனேயே மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தைக் கொடுப்போம் என்று சொன்னோம். நம் முதலமைச்சர் வெற்றி பெற்றவுடனேயே, முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனேயே அவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து திட்டம். இன்று அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமித்திருக்கிறார்கள்.
காலை உணவு:
குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும். படிக்க வேண்டும் என்பதற்காக இன்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகள் காலையில் அரசுப் பள்ளிக்கு வந்து படித்தார்கள் என்றால் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பசியோடு படிக்கக் கூடாது. பள்ளிக்கூடத்துக்கு வந்தார்கள் என்றால் முதலில் தரமான காலை உணவு. அதன் பிறகு தரமான கல்வியை நம் அரசு கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல. பள்ளிக்கூடத்துக்கு வந்தது போதாது, கல்லூரிக்குச் சென்று, மேல்படிப்புப் படிக்க வேண்டும் என்று, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கச் சென்றால், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்குக் கல்வி ஊக்கத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் நம் திராவிட மாடல் அரசு கொடுத்திருக்கிறது. 13 லட்சம் மாணவ, மாணவிகள் இதில் பயன்பெற்றிருக்கிறார்கள்.
பொய்க்குற்றச்சாட்டு:
இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ஒரே மாதத்தில் மடிக்கணினி கொடுத்திருக்கிறோம். இன்று அ.தி.மு.க ஒரு பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இந்த மடிக்கணினி திட்டம் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்று. ஆம், அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான். அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கூடம் படிக்கிற குழந்தைகளுக்கு மடிக்கணினி கொடுத்தார்கள்.
ஆனால் 2019-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியிலேயே அதை நிறுத்திவிட்டார்கள், அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் நம் முதலமைச்சர். இந்த மடிக்கணினி திட்டம் பள்ளிக்கூடகுழந்தைகளை விடக் கல்லூரி படிக்கிற மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மேல்படிப்புப் படிப்பதாக இருக்கட்டும், ஒரு வேலைக்குச் செல்வதாக இருக்கட்டும். ஒரு திட்டம் தயாரிப்பதாக இருக்கட்டும், மடிக்கணினி கல்லூரி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினியை, நம் முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்கள்.
பாஜக - அதிமுக திட்டம்:
தேர்தல் வாக்குறுதியில் நாம் சொன்ன வாக்குறுதி கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. இன்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் தலைவர் கொடுத்திருக்கிறார்.
அந்தத் திட்டத்தை தேர்தலைக் காரணம் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் திட்டம் போட்டார்கள். ஆனால் நம் தலைவர் அந்தச் சூழ்ச்சியை முறியடித்துப் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்குச் சேர்த்து ஒரே தவணையாக, கோடைக்காலச் சிறப்பு நிதி என்று 5,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்குக் கொடுத்திருக்கிறோம். தலைவர் காலையில் 6:30 மணிக்கு வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள்.
நம்பிக்கை இல்லை:
நம் மகளிர் எல்லாம் என்ன செய்தார்கள். காலை 9:00 மணிக்கே சென்று எடுத்துவிட்டார்கள். ஏன்? மோடி மீது, ஒன்றிய அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. குறைந்தபட்ச இருப்பு என்று சொல்லி மோடி அந்தப் பணத்தையும் எடுத்துவிடுவார் என்று நம் மகளிர் மிகத் தெளிவாக எடுத்தார்கள்
நம் தலைவர் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை, மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
வாக்குறுதி:
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம். தமிழ்ப் புதல்வன் திட்டம் கல்வி ஊக்கத் தொகை 1,000 ரூபாயிலிருந்து மாதம் 1,500 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வீடற்றவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
8 ஆயிரம் கூப்பன்:
அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் உயர் கல்வி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதே மாதிரி இன்னொரு முக்கியமான திட்டம் உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், அதுதான் இல்லத்தரசி திட்டம். ஆட்சி அமைந்த உடனே முதலமைச்சர் எல்லா மகளிருக்கும் 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கூப்பன் கொடுத்துவிடுவார். அந்த கூப்பனை வைத்துக்கொண்டு இல்லத்தரசிகள் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
திராவிட மாடல் 2.0:
உங்கள் வீட்டிற்கு என்ன மின்சாதனப் பொருட்கள் தேவையென்றாலும் நீங்களே தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம். அது தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி, பிரிட்ஜ் ஆக இருந்தாலும் சரி, துணி துவைக்கும் இயந்திரமாக இருந்தாலும் சரி, அரவை இயந்திரமாக இருந்தாலும் சரி, அது உங்கள் விருப்பம். நீங்களே முடிவு செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டங்கள் எல்லாம் நாம் நிறைவேற்ற வேண்டுமானால் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும்,நம் தலைவர் முதலமைச்சராக அமர வேண்டும்
நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.




















