Puducherry Traffic Changes: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; முக்கியச் சாலைகள் மூடல்: போலீஸ் முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி லாஸ்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாகின்றன. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள லாஸ்பேட்டை பகுதியில் அதிரடி போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளி்ல் 2 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி லாஸ்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,
போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்தம்:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் தாகூர் கலைக் கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
வாகன நிறுத்தம்:
- மகளிர் பொறியியல் கல்லூரிக்கு வருவோர்: நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி.
- மோதிலால் நேரு பாலிடெக்னிக் வருவோர்: வள்ளலார் பள்ளி பின்புறம்.
- தாகூர் கலைக் கல்லூரி வருவோர்: கல்லூரி மைதானம்.
பாதை மாற்றம் மற்றும் தடை:
ஜீவா காலனியில் இருந்து விமான நிலைய சாலைக்கு செல்லும் வாகனங்கள் நாவலர் நெடுஞ்செழியன் சந்திப்பில் திருப்பி விடப்படும்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வழியாக வரும் வாகனங்கள் ஜெ.டி.எஸ். (JTS) சந்திப்பில் ராஜாஜி சாலைக்கு மாற்றி விடப்படும்.
விமான நிலைய சாலை வழியாக வரும் வாகனங்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் திருப்பி விடப்படும்.
எந்தவொரு அரசியல் கட்சி வாகனங்களும் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாடுகள்:
தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது:
QR கோடு அடையாள அட்டை: தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட QR குறியீடு மற்றும் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி உண்டு.
செல்போனுக்கு தடை: வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட வேறு எவரும் கைபேசி (Mobile Phone) கொண்டு செல்ல அனுமதியில்லை.
வெளிப்படையான நடைமுறை: கட்டுப்பாட்டு கருவிகளில் (Control Units) இருந்து பெறப்படும் முடிவுகள் (படிவம் 17C-II), முகவர்களின் முன்னிலையிலேயே தயார் செய்யப்பட்டு அவர்களின் கையொப்பம் பெறப்படும்.
நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு: ஒவ்வொரு மேசையிலும் உள்ள நுண் பார்வையாளர்கள் முடிவுகளைத் தனியாகக் குறித்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் குறுக்குச் சரிபார்ப்பிற்காகப் பார்வையாளரிடம் ஒப்படைப்பார்கள்.
புதுச்சேரி மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய நாளில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்


















