Senthil Balaji: கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
2026 தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம், மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கடந்த தேர்தலை விட மிக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் - செந்தில் பாலாஜி

கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலை விட அதிகளவில் இடங்களை வெற்றி பெறுவோம் என்று கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆசி தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்ததுடன், கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியிலிருந்து பேரணியாக ஜவஹர் பஜார் வழியாக ஊர்வலமாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். வேட்பாளராக ஆசி தியாகராஜனும், மாற்று வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக மக்கள் எழுச்சியை பார்த்து இருப்பீர்கள், நிச்சயமாக கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆசி தியாகராஜன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கரூர் தொகுதி மட்டுமல்ல 2021 தேர்தலை போல 2026 தேர்தலில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். எதிர்க்கட்சி தலைவர் முதல் மாவட்டத்தில் உள்ள 2ம் கட்ட தலைவர்கள் வரை ஒருமையில் பேசுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை எல்லாம் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தலைவர் தலைமை ஏற்றதில் இருந்து சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த 2026 தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம், மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கடந்த தேர்தலை விட மிக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்” என்றார்.




















