(Source: ECI/ABP News)
TVK Vijay: விஜய் செஞ்ச தப்பு.. குமுறும் நிர்வாகிகள்.. அப்போ தேர்தல் வெற்றி கனவு தானா?
சென்னை, காரைக்குடி தவிர மற்ற இடங்களில் விஜய் பரப்புரை செய்ய செல்லும்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவோ அல்லது பெயர்களை சொல்லவோ இல்லை. முழுக்க, முழுக்க திமுக, பாஜக எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவாகும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செய்த தவறுகளால் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மந்தமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் 2வது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. அதில் எந்த மாற்றமுல்லை. காரணம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையாகும். சேலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சைக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜய், மற்ற 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. மார்ச் 30ம் தேதி சென்னை பெரம்பூரிலும், ஏப்ரல் 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் என தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். விஜய் வருகை தமிழக அரசியல் களத்திற்கு புத்துயிர் அளித்ததாக பார்க்கப்பட்ட நிலையில் அவர் செய்த தவறுகள் தவெக வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் செய்த தவறுகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கையில் காரைக்குடி, திருவள்ளூர், கன்னியாகுமரி என 6 மாவட்டங்களுக்கு மட்டுமே விஜய் பரப்புரை மேற்கொள்ள சென்றார். சென்னையில் உள்ள தி.நகர், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் வாகனப் பேரணி சென்றார். கடைசி நாளான இன்று சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு வாகனப்பேரணி செல்லவுள்ளார். ஆனால் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் விஜய் 200 தொகுதிகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது.
சென்னை, காரைக்குடி தவிர மற்ற இடங்களில் விஜய் பரப்புரை செய்ய செல்லும்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவோ அல்லது பெயர்களை சொல்லவோ இல்லை. முழுக்க, முழுக்க திமுக, பாஜக எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்தார். பல இடங்களில் பிரச்சாரம் ரத்து, 1 மணி நேரம் மட்டுமே கொடுக்கிறார்கள், ஒருநாள் பரப்புரை மேற்கொண்டார் 2 நாட்கள் விடுமுறை விடுவது என விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது. இதனால் தவெக தொண்டர்கள் மிகப்பெரிய அளவில் அதிருப்தியடைந்தனர்.
அதேசமயம் போலீசார் பாதுகாப்பு வழங்க மறுக்கிறது, விரும்பிய இடத்தில் நேரம் தர மறுக்கிறார்கள் என என்னென்னவோ காரணத்தை சொன்னார்கள். ஒருகட்டத்தில் கேட்டது அனைத்தும் கிடைத்தும் தவெக பரப்புரை வேகமெடுக்கவில்லை. காலை 6 மணி வரை இரவு 10 மணி வரை பரப்புரை மேற்கொள்ள அனுமதி இருந்தாலும் 6 மணிக்கு மேல் விஜய் பிரச்சாரம் ஒரு இடத்தில் கூட மேற்கொள்ளவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் விஜய்க்கு அமோக ஆதரவு இருந்தாலும் அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என்ற ஆதங்கம் தவெக தொண்டர்களுக்கு இருக்கிறது. உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் பெயர் மட்டுமே தெரியும். முகம் கூட தெரியாது. சில இடங்களில் இரண்டும் இல்லை. அனைவரின் கணக்கும் விஜய் கட்சி, விசில் சின்னம் என்பதில் மட்டும் தான் உள்ளது. அது இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?.. இல்லை விஜயின் எம்ஜிஆர் கணக்கு பொய்யாகுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















