Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி என ஜோதிமணி எம்.பி., காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மை என அக்கட்சியின் கரூர் மாவட்ட எம்.பி., ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து மோதல்
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறையும் திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி நீடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்டது தொடங்கி 40 தொகுதி வரை சட்டமன்ற தேர்தலில் வேண்டும் என நிபந்தனை விதித்தது வரை அடுத்தடுத்து பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றது. பல கட்ட பேச்சுவார்த்தை, திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் என இந்த கூட்டணி நீடிக்குமா என ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நிலைமை இருந்தது.
தீராத உட்கட்சி பூசல்
எனினும் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் திமுக ஒதுக்கியது. தற்போது அடுத்த சிக்கலாக எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்து வருகிறது. இதில் தென்காசி, விருத்தாச்சலம் தொகுதியை 2021ல் பெற்றிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. கடந்தமுறை அக்கட்சி வென்ற 16 தொகுதிகளை மீண்டும் கேட்டுப் பெற்றுள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதியையும் காங்கிரஸ் கட்சி கேட்டு வாங்கியுள்ளது. 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள 5 தொகுதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை காப்பாத்துங்க
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட எம்.பி., ஜோதிமணி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின்…
— Jothimani (@jothims) March 27, 2026
நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஜோதிமணியின் ட்வீட் தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.




















