Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama PMK: வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த திலகபாமா, தனது கையில் தராசு ஒன்றை ஏந்தி வந்தது அங்கிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு எல்லா வசதியும் கிடைத்து அவர்கள் நன்றாக இருந்தால் அதுதான் என்னைப் பொருத்தவரை ஸ்டார் தொகுதி என்று பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
ஸ்டார் தொகுதியான பெரம்பூர்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதி மிக முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பாமக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, இன்று பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தராசுடன் வந்த திலகபாமா
வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த திலகபாமா, தனது கையில் தராசு ஒன்றை ஏந்தி வந்தது அங்கிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாகவே தராசை ஏந்தி வந்தேன்" என்று தெரிவித்தார்.
மேலும், தன் மீதான எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசுகையில், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தடையின்றி கிடைத்து, அவர்கள் நிம்மதியாகவும் நலமாகவும் வாழ்வதே என் பார்வையில் 'ஸ்டார்' தொகுதி" என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

பெரம்பூரில் மும்முனைப் போட்டி:
தற்போதைய அரசியல் சூழலில் பெரம்பூர் தொகுதி மிக முக்கியமான தேர்தல் களமாக மாறியுள்ளது. இத்தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரும், கட்சியின் மூத்த தலைவருமான திலகபாமா போட்டியிடுகிறார். தனது நீண்டகால அரசியல் அனுபவத்தை முன்வைத்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் போட்டியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் களம் காண்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றாகப் பெரம்பூர் இருப்பதால், அவரது வருகை இத்தொகுதியில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான திமுகவின் ஆர்.டி. சேகர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியில் தனக்கிருக்கும் செல்வாக்கையும், கடந்த காலப் பணிகளையும் முன்வைத்து தனது வெற்றியை உறுதி செய்ய அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இத்தகைய வலிமையான வேட்பாளர்களுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டி, பெரம்பூர் தொகுதியை ஒரு முக்கிய 'ஸ்டார்' தொகுதியாக மாற்றியுள்ளது.





















