Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
கடந்த தேர்தலின்போது முதலமைச்சர் ஸ்டாலின் 505 வாக்குறுதிகளை அளித்தார். அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு உரிய திட்டங்கள், நிதிகளை வழங்காதாவரை என்றைக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஜீரோ தான் என மதிமுக முதன்மை செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து துரை வைகோ பரப்புரையில் ஈடுபட்டார்.
திமுக அரசின் முத்தான திட்டங்கள்
அப்போது பேசுகையில், பூமிநாதன் நம் கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். மக்கள் எதற்காக இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற விளக்கத்தை அளிக்க நான் வந்து இருக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த எல்லாவற்றையும் சொல்ல முடியாவிட்டாலும் முக்கியமான நான்கு விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். கடந்த தேர்தலின்போது முதலமைச்சர் ஸ்டாலின் 505 வாக்குறுதிகளை அளித்தார். அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ. 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பண வசதி இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத ஏழை விட்டு பிள்ளைகள் பல்லாயிரக்கணக்கானோர் கல்வி கனவை கைவிட்டு வந்தனர். அதை தடுத்து அனைவருக்கும் கல்வி கிடைக்கமும் விதமாக ஆண் பிள்ளைகளுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தையும், பெண் பிள்ளைகளுக்கு புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார். இந்த ஊக்கத்தொகையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.1,500 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
விடியல் அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்துடன், மிகவும் சிறப்பான இல்லத்தரசிகளின் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும். இலவசங்களை கொடுத்து நாட்டை கெடுப்பதாக சில அறிவு ஜீவிகள் பேசுகின்றனர். ஆனால் இந்த இலவசங்கள் ஏழை மக்களுக்கே வழங்கப்படுகின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. புதூர் மு. பூமிநாதன் அவர்களை ஆதரித்து மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், உதயசூரியன்… pic.twitter.com/wwsUP8piFX
— Durai Vaiko (@duraivaikooffl) April 13, 2026
மறுபக்கம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என சுமார் 12.37 லட்சம் கோடி ரூபாய் முதலீகள் மூலமாக 36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இது எல்லாம் வேற்று விளம்பரங்கள் என எதிர்க்கட்சிகள் சொன்னதை பொய்யாக்கும் விதமாக சென்னையில் செயலாக்க மாநாட்டை நடத்தி 73 சதவிகித ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு தொழிற்சாலைகள் எங்கெல்லாம் திறந்திருக்கப்பட்டுள்ளன என்பதை தரவுகளுடன் ஸ்டாலின் நிரூபித்தார்.
ஒருபக்கம் சமூகநீதிக்க வலுசேர்க்க ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு திட்டங்கள். மறுபக்கம் தொழில்வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக சிறப்பான திட்டங்களை முன்னெடுக்கும் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார்” என புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்
தொடர்ந்து வேட்பாளர் பூமிநாதனை பற்றி பேசுகையில், மக்கள் சாதி, மதம் மற்றும் அரசியலையும் கடந்து நல்ல மனிதரை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும். அப்படிப்பட்ட நல்ல வேட்பாளர் தான் மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதன். அவருடைய அலுவலகத்திற்கு சென்றால் எந்த கட்சி, எந்த மதம் என்ன சாதி என்பதை பார்க்க மாட்டார். கடந்த தேர்தலில் இவர் வாக்கு கேட்டு வந்தபோது உங்களை போன்று வந்தவர்கள் யாரும் எதையும் செய்யவில்லை என கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவிகிதம் பூர்த்தி செய்துள்ளார். மக்களாகிய நீங்களே அவருக்காக ஒட்டு கேட்க வேண்டும்.
மேலும் அதிமுக பாஜக பற்றி இங்கு பேசியாக வேண்டும். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை 2015ம் ஆண்டு அறிவித்து 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதே காலகட்டத்தில் வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கே வந்துவிட்டன. ஆனால 11 வருடம் ஆகியும் மதுரையில் செயல்பாட்டிற்கு வரவில்லை. காரணம் மதுரை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது தான்.
சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த மெட்ரோ ரயில் மதுரைக்கு வேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் மதுரைக்கு மெட்ரோ வரும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் இங்கு வந்து பரப்புரை செய்கிறார். தமிழ்நாட்டிற்கு உரிய திட்டங்கள், நிதிகளை வழங்காதாவரை என்னைக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஜீரோ தான். மதுரை தெற்கு தொகுதியில் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















