TN Election 2026: ‘விஜயின் திமுக எதிர்ப்பு எந்த காலத்திலும் நடக்காது’ - ஓ.பி.ரவீந்திரநாத் சவால்!
விஜய் திமுகவை எதிர்க்கிறேன் என்று தான் களமிறங்கியுள்ளார். அது எந்த காலத்திலும் நடக்காது. திமுகவின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் சென்று சேர்ந்து விட்டது என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

விஜயை காண வரும் கூட்டம் ஒரு பிம்பம், அது வெறும் ரசிகர் கூட்டமாக தான் பார்ப்பதாக திமுக நிர்வாகி ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. அதேசமயம் சசிகலா, டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, வேல்முருகன் போன்ற தலைவர்களும் சில தொகுதிகளில் தனித்து களம் காண்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் சேர்ந்தார். அவர் சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் மகன் முன்னாள் எம்.பி.,யான ஓ.பி.ரவீந்திரநாத் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத்திடம், “பெரும்பாலான இளைஞர்கள் அதிமுகவில் இல்லை என சொல்கிறீர்கள். மாற்றுக்கட்சிக்கு போய் விட்டதாக கூறுகிறீர்கள். விஜய் அரசியலுக்கு வந்த பின்பு, அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “அரசியலுக்கு விஜய் மட்டுமல்ல.. யார் வேண்டுமானாலும் வரலாம். ஒரு காமெடி நடிகர் வந்தால் 200 பேர் கூட கூடுவார்கள். அவரை பார்த்து விட்டு போய் விடுவார்கள். இன்றைக்கு விஜய் 25 ஆண்டுகளாக ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் மூலம் நிறைய செய்துக் கொண்டிருக்கிறார்.
அவருடன் குறிப்பிட்ட ஒரு சதவிகிதம் மட்டும் தான் இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் களத்தில் ஜெயிக்க வேண்டும். வாக்கு சதவிகிதம் ரொம்ப முக்கியம். ஒரு 10 சதவிகிதம் வாக்கு பெற்று முதலமைச்சர் ஆகி விடலாம் என விஜய் நினைக்கிறார். எல்லாருக்கும் ஆசை இருக்கலாம். விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு நடிகரை காண வரும் ரசிகர் கூட்டமாக தான் பார்க்கிறேன். அவர் இன்னும் களத்தில் இறங்கி தேர்தலில் நின்று ஜெயித்து தன்னை நிரூபிக்கவில்லை. இதுதான் முதல் தேர்தல் களம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட திமுகவில் இருந்து எம்.எல்.ஏ.வாகி கொள்கைகளை வளர்த்து பின் அதிமுகவை உருவாக்கினார்.
ஆனால் விஜய் திமுகவை எதிர்க்கிறேன் என்று தான் களமிறங்கியுள்ளார். அது எந்த காலத்திலும் நடக்காது. திமுகவின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடத்தில் சென்று சேர்ந்து விட்டது. நான் தேர்தல் களத்திற்காக கிராமத்திற்கு செல்கிறேன். அங்கிருக்கும் வீடுகளில் சென்று மக்களுடன் பேசுவேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வது என்னவென்றால் திமுக இன்றைக்கு வலுவாக இருக்கிறது. விஜய்க்கு வரும் கூட்டமானது ஒரு பிம்பம்” என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















