TN Election: 4 மேயர்களுக்கு டிக் அடித்த ஸ்டாலின் - பிரியாவுக்கு நோ சொன்னது ஏன்? கரையேறுமா அசெம்ப்ளி கனவு?
TN Election 2026 Mayor As Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4 மேயர்கள் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

TN Election 2026 Mayor As Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை மேயர் பிரியா போட்டியிட விரும்பியதாக கூறப்படும் நிலையில், திமுக வாய்ப்பு அளிக்காதது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேயர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கலையே தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் போக திமுக சுமார் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிறது. இதில் பல வேட்பாளர்களின் பின்புலம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக 4 சிட்டிங் மேயர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை மேயர் பிரியாவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முயன்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவலும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
அசெம்ப்ளி கனவில் 4 மேயர்கள்
கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரான ரெ. மகேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மேயரான சண். ராமநாதன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும், ஓசூர் மேயர் சத்யா ஓசூர் தொகுதி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும் மற்றும் திருப்பூர் மேயர் தினேஷ் குமார் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது சட்டமன்ற கனவு பலிக்குமா என்பதை, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் தான் உறுதிப்படுத்தும். சென்னை துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் விருப்பமனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்க்லான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை மேயர் பிரியாவின் சட்டமன்ற கனவு
தலைநகர் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயர், முதல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் மேயர் மற்றும் மிக இளம் வயது மேயர் என்ற பெருமைக்குரியவர் பிரியா. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரின் வழியில், மேயர் பதவியிலிருந்து அப்படியே சட்டமன்றத்திற்குள் நுழைய திட்டமிட்டாராம். தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் வலுவான திமுகவின் பின்புலம் மூலம், சொந்த தொகுதியான திரு.வி.க. நகரில் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிட முடியும் எனவும் நம்பிக்கை கொண்டிருந்துள்ளார். தனக்கு நெருக்கமான அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமும், தலைக்கு தனது விருப்பத்தை தெரிவித்தாராம். இதனால், திரு.வி. க. நகருக்கான வேட்பாளர்கள் பரிசீலனை பட்டியலில் பிரியாவின் பெயரும் அடிபட்டதாக கூறப்படுகிறது.

திமுக தலைமை நிராகரித்தது ஏன்?
ஆனால், திமுகவின் வேட்பாளர்களில் பட்டியலில் மேயர் பிரியாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக திரு.வி.க. நகரில் கே.எஸ். ரவிச்சந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு விவகாரங்களில் மேயர் பிரியாவின் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துணை மேயர் உடனான அதிகார மோதலால் மாநகராட்சியின் முக்கியமான கோப்புகள் மற்றும் பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது. திமுக மேலிடம் இவர்களை சமாதானப்படுத்த முயன்றாலும், உள்ளூர் அளவில் இருவருக்கும் இடையேயான போட்டி நீடிக்கிறதாம். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற மறுப்பது, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேட்பாளராக களமிறங்குவது ஆகிய காரணங்களால், திரு.வி.க. நகரில் மேயர் பிரியாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையாம். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்




















