TVK: விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. தவெக வேட்பாளராக போட்டியிட விருப்பமா? - இந்த தேதியில் ரெடியா இருங்க?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட பிப்ரவரி 6 முதல் 14 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தளப்பக்கத்தில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவரின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சி தொடங்கி நேற்றுடன் மூன்றாண்டு ஆன நிலையில், அதை சிறப்பாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். கட்சிதொடங்கி 3 ஆண்டுகள் ஆகி முதல்முதலாக அக்கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் இது. இதற்காக விருப்ப மனு தேதி அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















