அமமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடா..? - தீக்குளிக்க முயற்சித்த அதிமுக தொண்டர் - திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படும் என்பதால் தீக்குளிக்க முயற்சித்த அதிமுக தொண்டரால் பரபரப்பு.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக தொண்டர் மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மிக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்க உள்ள நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக ஞானசேகருக்கு சீட்டு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் உத்தேச பட்டியலில் உள்ள நகர செயலாளர் டிடி குமார் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ஆகியோருக்கு மட்டுமே சீட்டு ஒதுக்க வேண்டும் என கூறி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திருப்பதியின் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அப்போது தொண்டர் ராஜா என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவிற்கு மட்டுமே திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக தலைமையில் அறிவிக்கப்பட வேண்டும் தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கும் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் A. ஞானசேகர் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.




















