சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
"முகத்தில் சிகரெட் புகையை ஊதுகிறார்கள்" - முன்னாள் அமைச்சரின் சகோதரர் மீது பகீர் குற்றச்சாட்டு; இரட்டை இலைக்கே வாக்கு என உருக்கம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் தெற்கு நகரச் செயலாளர் பசுபதி, இன்று தனது பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
தன்னிச்சையான முடிவு: ஆதரவாளர்களுடன் ஆலோசனை
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர் சி.வி. சண்முகம் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகக் கூறி, பசுபதி கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்து வந்தார். இது தொடர்பாக நேற்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், சி.வி. சண்முகத்தின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"முகத்திலேயே சிகரெட் புகை": சகோதரர் மீது பகீர் புகார்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பசுபதி, அதிமுகவிலிருந்து விலகுவதற்கான காரணங்களை உருக்கமாகவும், ஆவேசமாகவும் விளக்கினார். அவர் கூறுகையில்:
"கட்சியில் சி.வி. சண்முகத்தின் தம்பி ராதாகிருஷ்ணனின் தலையீடு எல்லை மீறிச் சென்றுவிட்டது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் சிகரெட்டைப் பற்றவைத்து, அதன் புகையை நிர்வாகிகள் முகத்திலேயே ஊதுகிறார். எவ்வித மரியாதையும் இல்லாமல் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவர்களின் இத்தகைய போக்கால்தான் கடந்த தேர்தலில் சி.வி. சண்முகம் தோல்வியைத் தழுவினார்."
சமூக நீதிப் புறக்கணிப்பு?
தொடர்ந்து பேசிய பசுபதி, மாவட்டத்தில் நிலவும் சாதி ரீதியான அரசியல் குறித்தும் அதிருப்தி வெளியிட்டார். "விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் மற்றும் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக, மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உடையார் சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது," எனப் பட்டியலிட்டுக் குற்றம் சாட்டினார்.
"கட்சி மாறமாட்டேன்.. இரட்டை இலைக்கே வாக்கு"
கட்சியிலிருந்து விலகினாலும் அதிமுக மீதான தனது பற்றை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. பிற கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்தாலும் நான் வேறு எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டேன். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் ஆசை. நானும் எனது ஆதரவாளர்களும் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களிப்போம். என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தன்னைப்போலவே மாவட்டத்தில் பல நிர்வாகிகள் சி.வி. சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், மாவட்டத்தின் செல்வாக்குமிக்க தலைவரான சி.வி. சண்முகம் மீது இத்தகைய கடுமையான புகார்களைக் கூறி விலகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




















