விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திருமாவளவன் கையெழுத்திட்டார்.

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. 21 கட்சிகளை கொண்ட கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஒரு மாதமாகவே திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த முறை 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில், 4 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தையானது இழுபறியாகவே நீடித்து வந்தது.
விடுதலை சிறுத்தைக்கு 8 தொகுதி ஒதுக்கீடு
இந்த சூழ்நிலையில் தான் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.




















