Senthil Balaji: தொகுதியை மாற்றியது ஏன்? - பின்னால் நடந்த காரணத்தை போட்டுடைத்த செந்தில் பாலாஜி!
மு.க.ஸ்டாலின் என்னை செயல்வீரர் என சொல்கிறார். அந்த வார்த்தை இன்னும் வேகமாக செயல்பட வைக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைக்கிறேன் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார். தொகுதி முழுக்க தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய செந்தில் பாலாஜி, “கோவை மாவட்டம் முழுவதும் களம் சிறப்பாக இருக்கிறது. இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். 2021 தேர்தலில் திமுகவில் கோவை மாவட்டத்தில் வெற்றி கிடைக்கவில்லை. அதனை 2026ல் நிச்சயமாக மாற்றுவோம். மக்களும் வாக்களிக்க உறுதியாக இருக்கிறார்கள். 2021 தேர்தலில் கூட சில தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றோம். நிச்சயம் இந்த முறை கோவை மாவட்டத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் கொங்கு மண்டல பொறுப்பாளராக உள்ள நிலையில் இந்த போட்டியை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை கிடையாது. அப்படி ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக தான் வெற்றி பெற்றது. இந்த முறை எதிர்பார்ப்பதை விட மிகப்பெரியதாக இருக்கும் என செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியது ஏன் என்ற கேள்விக்கு, “2019 திமுகவில் நான் இணைந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கொடுத்தார். 2021 தேர்தலில் கரூரில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இப்போது கோவை தெற்கு கிடைத்துள்ளது. எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். அதனை செயல்படுத்த வேண்டியது தொண்டராக என்னுடைய கடமையாகும்.
மு.க.ஸ்டாலின் என்னை செயல்வீரர் என சொல்கிறார். அந்த வார்த்தை இன்னும் வேகமாக செயல்பட வைக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைக்கிறேன். திமுகவில் நான் மட்டும் உழைக்கவில்லை. எல்லாரும் உழைக்கிறார்கள்” என தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி குறிவைக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “நான் அப்படி நினைக்கவில்லை. கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை கேட்டதால் நான் பதில் சொல்ல சென்றேன். கரூர் சம்பவம் பற்றி தொலைக்காட்சி வாயிலாகவும்,அங்கு சென்றவர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். நான் தகவல் தெரிந்து அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை சென்றேன். அந்த கூட்டத்தை யார் நடத்தினார்கள், தாமதமாக யார் வந்தார், 41 பேர் பலியான பிறகு ஊரை விட்டு ஓடியது என அந்த கேள்விகளை விஜயிடமும், தவெகவினரிடமும் தான் வைக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட எங்கள் மாவட்ட மக்களை காப்பாற்ற சென்ற எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்” என ஆதங்கத்தை தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















