TN Election Results: வாக்குகள் சமமாக வந்தால் என்ன நடக்கும்? தேர்தல் விதிகளில் ஒளிந்திருக்கும் அதிரடி உண்மை!
Tamil Nadu Election Results 2026: "ஒரு பகுதியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் சமமான, வாக்குகளை பெறும்போது குலுக்கல் சீட்டு முறையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்."

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8:00 மணிக்குத் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மையங்களில், பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பல சுற்றுகளாக இந்த எண்ணிக்கை நடைபெறும். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என பலமான நான்கு முனைப் போட்டி நிலவுவதால், முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஜய்யின் வருகையும் இளம் தலைமுறையினரின் தாக்கமும்
இந்தத் தேர்தலில் குறிப்பாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம், நடிகர் விஜய் தலைமையில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம். முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்க்கு ஆதரவாக இளம் தலைமுறையினர் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் பெருமளவில் வாக்களித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்களின் வாக்குகள் முடிவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, பல தொகுதிகளில் வெற்றி-தோல்வி என்பது 1000-க்கும் குறைவான வாக்குகள் என்ற மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது
கடந்த கால வரலாறு: நூலிழையில் கைநழுவிய வெற்றி
கடந்த சட்டமன்றத் தேர்தல்களின் தரவுகளைப் பார்க்கும்போது, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் பல உள்ளன. உதாரணமாக, கடந்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. இதேபோன்று 1000-க்கும் குறைவான மற்றும் 2000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையிலும் இதேபோன்ற "நெருக்கமான போட்டி" (Close Contest) பல இடங்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குகள் சமமானால் என்ன நடக்கும்?
வாக்கு எண்ணிக்கையின் போது ஒருவேளை இரண்டு வேட்பாளர்கள் மிகச் சரியாக ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால் (Tie), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி "குலுக்கல் முறை" பின்பற்றப்படும். இரு வேட்பாளர்களின் பெயர்களும் தனித்தனி சீட்டுகளில் எழுதப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் குலுக்கி எடுக்கப்படும். அதில் யாருடைய பெயர் வருகிறதோ, அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது அந்த சீட்டில் வரும் பெயர் யாருக்கு இருக்கிறதோ அவருக்கு ஒரு வாக்குகள் ஒதுக்கப்படும். அதற்கு முன்னதாக, மறுமுறை வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்
இது போன்ற "சம வாய்ப்பு" நிகழ்வுகள் பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிகம் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, கடந்த காலங்களில் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் போன்ற இடங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றபோது, குலுக்கல் முறையிலேயே வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டனர்.
மும்பை மாநகராட்சித் தேர்தலிலும் கூட ஒருமுறை சிறுமியை வைத்து சீட்டு எடுக்கச் செய்து வெற்றி அறிவிக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. இப்படி ஒரே ஒரு வாக்கு அல்லது ஒரு சிறு துண்டுச் சீட்டு கூட ஒருவரின் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் என்பதால், நாளைய வாக்கு எண்ணிக்கை களம் பெரும் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















