Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி?
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் ஆக திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை நிறுத்தப்படுகிறார்.

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி., புதிய நீதிக் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்க்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை
மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக, திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனர், நடிகருமான சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை நிறுத்தப்படுகிறார்.
30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
குஷ்பு வாழ்த்து
இதற்கு நடிகையும் சுந்தர்.சி.யின் மனைவியுமான குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அவர் (சுந்தர்.சி.) அரசியலுக்கு வந்து விட்டார். தனது தந்தை சிதம்பரம் பிள்ளை மற்றும் 94 வயது தாய் தெய்வானை சிதம்பராம் பிள்ளை ஆகியோரின் ஆசியுடன் உங்களின் ஆதரவைக் கோருகிறோம்.
அவருடைய துணைவியாகிய நான், பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மக்களை மகிழ்வித்து வரும் அவர், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்களுக்குத் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் நாங்கள் பணிவுடன் கோருகிறோம். மதுரை மக்களே, அவர் வருகிறார்’’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
And here he marks his entry into politics. !!
— KhushbuSundar (@khushsundar) March 28, 2026
Director/ Actor #SundarC makes his entry into politics as a candidate for #PuthiyanidhiKatchi (PNK) from Madurai. He will be contesting for #NDA under the symbol of #2leaves of #AIADMK .
With the blessings of his Late Father… pic.twitter.com/GS6l80XlQ0
அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள் ஒதுக்கீடாக புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக கூட்டணியின் கீழ், புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி. வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















