பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெருங்கும் தேர்தல்- பிரச்சாரம் தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில் மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரை வெற்றி பெறவைத்தால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
பேரம், பிளாக்மெயில் செய்யும் பாஜக முதலமைச்சர்
இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும் என அந்த பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.




















