Seeman: ஊழல், லஞ்சத்தில் வாழ ஆசையா? அதிமுக, திமுகவா? மாற்றமா? - ஆம்பூரில் சீமான் பேசியது என்ன?
பைந்தமிழ் ஆட்சியில், என்னென்ன மாறுதலை செய்ய காத்திருக்கின்றேன், ஒரு ஓட்டு 5 ஆண்டுகளில் உலக தரத்திற்கு மாற்றுவேன் - சீமான்

“லஞ்சம், ஊழலில் வாழும் ஆசை இருந்தால், அதிமுக, திமுகவிற்கு வாக்களியுங்கள், மாறுதல் வேண்டும் என்றால், எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்” என ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள புறவழிச்சாலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியை அப்சியா நஸ்ரின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முருகேசன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
நாட்டின் புற்றுநோயாக ஊழல், லஞ்சம்
அப்பொழுது பேசிய சீமான், “கஷ்டங்களிலும், தவிர்க்க முடியாத சூழலில் மக்களை நிறுத்தி விட்டு, தேர்தல் நேரத்தில், இலவச திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் வாக்கு வாங்கி, அதிகாரிகத்திற்கு வந்து, மக்களை பற்றி சிந்திக்காமல், பணத்தை பதுக்குவதில் குறியாக இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். நாட்டின் புற்றுநோயாக உள்ள ஊழல், லஞ்சம், அரசுடைமையாக்கப்பட்ட நாட்டில் வாழ்கின்றோம். ஊழல் லஞ்சத்தை, அழிக்கமுடியாமல் நேர்மையான ஆட்சியாளர்களாக நாட்டில் இருந்தார்கள். ஊழல், லஞ்சம் வாங்காதவன், பிழைக்க தெரியாதவன் என பேசும் நிலை உள்ளது.
நீரை உறிஞ்சி விற்கிறார்கள் அதை தடுக்க முடியும், மரம் தான் உயிர், நான் வந்தால், 10 ஆண்டுகள் பசுமை திட்டம். வனக்கொள்ளை, மலையை வெட்டினால் அதனை சரிசெய்ய முடியாது, மணலை திருடிவிட்டால், அதனை திரும்ப பெற முடியாது, 34 ஆறுகளை கொன்று புதைத்துவிட்டார்கள், மலையை கொள்ளையடிக்கும் சமூகம், இந்த சமூகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எப்படி ஆட்சி இருக்கும் என்பதை, 422 பக்க புத்தகங்களாக கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
குடிக்கவைத்து கொன்று கொண்டு இருக்கிறார்கள்
சமமான கல்வி, தூய்மையான தண்ணீர், சிறந்த மருத்துவம் நாங்கள் கொடுப்போம், இதனால் பணச்செலவு குறைகிறது. இலவசமாக தங்கம் தரமாட்டேன், அதற்கான வேலைவாய்ப்பை தருவேன், குழந்தைகளுக்கு மோதிரம் தர மாட்டேன், இலவசமாகவும், உயர்தர சிகிச்சை அளித்தால், அவனே தங்கம் வாங்கிகொள்வான். தடையின்றி பயோகேஸ் உற்பத்தி செய்து நானே தருவேன். விஷத்தை சாப்பிடுகிறார்கள், அதனை தடுத்து இயற்கை வேளாண்மை முறையில் நஞ்சில்லா உணவை தருவேன்.
கழுதை வளர்ப்பேன், கழுதை வளர்ப்பை பற்றி அறிவார்ந்தவர்கள் தேடுங்கள், கத்திக்கொண்டிருக்கும் நான் பைத்தியமா? அதை கேட்டுச்செல்லும் நீங்கள் பைத்தியமா? குடிக்கவைத்து கொன்று கொண்டு இருக்கிறார்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து அதனை டாஸ்மாக் மூலம் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும், நிலமும், வளமும், சார்ந்து அரசு வேலை.
கையேந்தி நிற்பது, ஓட்டுக்காக இல்லை நாட்டுக்காக
குழந்தையை பெற்றுக்கொடுங்கள், எங்களுடைய அரசு படிக்க வைக்கும், மருத்துவத்தை உலக தரத்திற்கு செய்யும், பசி என்ற சொல்லை நாட்டில் ஒழிப்பேன், பைந்தமிழ் ஆட்சியில், என்னென்ன மாறுதலை செய்ய காத்திருக்கின்றேன், ஒரு ஓட்டு 5 ஆண்டுகளில் உலக தரத்திற்கு மாற்றுவேன். ஊழல், லஞ்சத்தில் வாழும் ஆசை இருந்தால், அதிமுக, திமுகவிற்கு வாக்கு அளியுங்கள், மாறுதல் வேண்டும் என்றால் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், கையேந்தி நிற்பது, ஓட்டுக்காக இல்லை நாட்டுக்காக அநீதிக்கு எதிராக வாக்கு அளியுங்கள். எளியவர்களிடம் அதிகாரம்தான் உங்கள் அதிகாரம், வேட்பாளரை நிறுத்தவில்லை, ஒரு போர்களத்தில், முன்கள போராளியை நிறுத்தியுள்ளேன்” என பேசி, இறுதியாக பாடல்பாடி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.




















