Dr Krishnasamy: தாங்காது தமிழகம்.. அதிமுக கூட்டணியில் விரிசல்.. கிருஷ்ணசாமி தனித்து போட்டி!
Puthiya Tamilagam Dr Krishnasamy: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அமையப்பெற்றுள்ள அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. கடந்த காலங்களில் இந்த கூட்டணியில் கிருஷ்ணசாமி பயணப்பட்ட நிலையில் இம்முறை அவர் இடம்பெறாதது பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் அதிமுகவிடம் 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக குறைத்து பார்த்தும் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, “2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுரையிலும், 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே 'உண்மையான அரசியல் வெற்றி" என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர்.புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணசாமி வெளியிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் - சசிகலா கூட்டணி என்ற போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது புதிய தமிழகம் கட்சியும் தனித்து போட்டியிடுவதால் 6 முனை போட்டி உருவாகியுள்ளது. இதனால் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் இத்தனை முனை போட்டி நிலவுவதால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.




















