Anbumani: அதிகாரம் போய்டும்னு மாவட்டத்தை பிரிக்காத அமைச்சர்; அதிரடியாக குற்றம்சாட்டிய அன்புமணி
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் இபிஎஸ்; அந்த இட ஒதுக்கீட்டை கெடுத்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- ஆரணியில் அன்புமணி.

தன்னுடைய அதிகாரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் எ.வ. வேலு பிரிக்க விடாமல் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் என்று அன்புமணி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயசுதாவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அன்புமணி கூறியதாவது:
’’தமிழ்நாட்டிலேயே பரப்பளவில் மிகப்பெரிய இரண்டாவது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல 160 கிலோமீட்டர் ஆகும்.
இந்த நிலையில் தன்னுடைய அதிகாரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் எ.வ. வேலு பிரிக்க விடாமல் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்.
எ.வ.வேலு கள்ளக்குறிச்சியில் பிறந்தவர், தண்டராம்பட்டுக்கு பிழைப்புக்காக வந்து இன்று திமுகவில் அமைச்சராக மாறி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு தலைவனாக மாறியிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் தன்னுடைய ராஜ்ஜியம் அதிகாரம் குறைந்துவிடும் என எ.வ. வேலு அந்த மாவட்டத்தை பிரிப்பதற்கு தடையாக இருக்கிறார்.
ஒரு மாவட்டம் கூட உருவாக்கப்படலை
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 6 புதிய மாவட்டங்கள் பிரித்து உருவாக்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஒரு புதிய மாவட்டம் கூட பிரிக்கப்படவில்லை.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அது கிடைக்க விடாமல் கிடைத்தது முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த துரோகத்தை யாரும் மறந்து விட மாட்டார்கள்..
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த சாதனையும் செய்யாத காரணத்தால் தற்போது கூப்பன் கொடுத்து ஓட்டு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஆட்சியில் நீங்கள் சாதனை செய்திருந்தால் அந்த சாதனைகளை சொல்லிதானே ஓட்டு கேட்க வேண்டும்.
விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த அரசு
உலகத்திலேயே விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த அரசு திமுக அரசு. நமக்கு சோறு போடுகின்ற தெய்வம் விவசாயிகள் அந்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது திமுக அரசு. இந்த துரோகத்தை யாரும் மறந்துவிடக்கூடாது.
தமிழ்நாட்டில் இன்று விவசாயம் மட்டுமல்ல நெசவுத் தொழிலும் நாசமாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது அதற்கு காரணம் திமுகவின் மோசமான ஆட்சி.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் விளம்பர படத்தில் வந்து நடித்துவிட்டு செல்கிறார் அவ்வளவுதான். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானால் தமிழ்நாட்டுக்கு தேவையான ரயில்வே திட்டங்கள் மேம்பாலங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் எளிதாக பிரதமர் மோடி இடம் சென்று ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டிற்கு ஆன திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பார். திமுக அரசால் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முடியவில்லை’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















