அதிமுகவில் என்னை தோற்கடிக்க சதி.. திமுகவில் உழைத்தால் தான் பதவி.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!
இரட்டை இலையையும், அதிமுகவை குழிதோண்டி புதைத்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான். என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தேர்தலில் என்னை தோற்கடிக்க சதி செய்தவர் ஆர்.பி.உதயகுமார் என திமுக நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். 2022ம் ஆண்டு அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட பின் சட்டப்படியும், சமாதானம் பேசி பார்த்தும் மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அந்த கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் சேர்க்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த அவர் திமுகவில் இணைந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரையை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சரமாரியாக விமர்சித்தார்.
நான் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுக்கிறார். அவர் பெயர் சொல்லவே வெக்கமாக இருக்கிறது. அதிமுகவை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தவர் அவர். சிலர் நான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். நான் முதலில் வேண்டாம், எனக்கு 2 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி இருக்கிறது. எனவே வேண்டாம் என சொல்ல நீங்கள் தான் நிற்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தார்கள்.
அப்போது ஆர்.பி.உதயகுமார் எனக்கு எதிராக என் பெயருடைய 6 பேரை அழைத்து வைத்து போட்டியிட வைத்தார். எப்படியாவது ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதேசமயம் என்னை தேர்தலில் நிற்க வைத்து தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்களை போடுவார் என்பதை நினைத்துப் பாருங்கள். நானும் நம் சக்தியைக் காட்ட வேண்டும் என நினைத்தேன். ஏகப்பட்ட சதி வேலைகள் பார்த்தார்கள். கடைசியில் அதிமுக அந்த தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்தது தான் மிச்சம்.
இப்படி இரட்டை இலையையும், அதிமுகவை குழிதோண்டி புதைத்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான். என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?. நீ எப்போது கட்சிக்கு வந்தாய், யாரால் வந்தாய், பழனிசாமி முதலமைச்சர் பதவி வாங்கிய நிலையில் எப்படி மாறினார் என்பது தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய தொண்டர்கள் மீட்பு குழு அமைப்பு திமுகவில் இணைந்து விட்டது. அதனால் இனி ஓபிஎஸ் வாழ்கனு கோஷம் போட வேண்டாம். தளபதி வாழ்கனு சொல்லுங்கள். இப்ப நான் தொண்டன் தான். இங்கு உழைச்சா தான் பதவி என்பது எனக்கு தெரியும் எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.




















