EPS Vs MK Stalin: “இந்த கட்டதுரை திருந்தவே மாட்டார்“; பிரசாரத்தின்போது ஸ்டாலினை விட்டு விளாசிய எடப்பாடி பழனிசாமி
நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

நாகப்பட்டினத்தில், திரளான பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டையில் பேசிய மு.க. ஸ்டாலின், மக்களுக்காக எதுவும் சொல்லாமல், தன்னைப் பற்றியே பேசிவிட்டு சென்றுவிட்டார் என குற்றம்சாட்டினார்.
மக்களுக்காக பேசாமல் என்னை பற்றி அவதூறு பேசுகிறார் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஒரு முதலமைச்சராக பேசாமல், தன்னைப் பற்றி எந்தெந்த விதத்தில் அவதூறாக பேச முடியுமே, அப்படி பேசிவிட்டு சென்றதாகவும், அதற்காகவா அவரை தேர்ந்தெடுத்தீர்கள் என்றும் மக்களிடையே அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதிமுகவை பற்றி பேசுவதற்கும், அதிமுக அரசை பற்றி பேசுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, அதனால், தேர்தல் பரப்புரை தொடங்கியதிலிருந்து தன்னைப் பற்றி அவதூறு பேசுவதாக கூறினார். அதிமுக பாஜகவிற்கு அடிமை என்று அவர் கூறுகிறார், ஆனால் அப்படியா இருக்கிறது என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய பழனிசாமி, தங்கள் கட்சியின் தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது என கூறினார்.
வின்னர் பட கட்டதுரையை ஸ்டாலினுடன் ஒப்பிட்டு பேசிய பழனிசாமி
மேலும், வின்னர் படத்தில் வடிவேலுவின் காமெடியை பற்றி குறிப்பிட்ட அவர், அதில் கட்டதுரை கேரக்டரை சொல்லி, ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால், தன்னால் அந்த காமெடியை பற்றி முழுமையாக கூற முடியாது என்றும், நீங்களே(மக்கள்) நிரப்பிக் கொள்ளுங்கள் என்று கூறிய அவர், அந்த கட்டதுரை திருந்துவதுபோல் தெரியவில்லை என்று விமர்சித்தார். இன்னும் நிறைய இருப்பதாகவும், நாகரிகம் கருதி அந்த நகைச்சுவையை முழுமையாக குறிப்பிடவில்லை என்றும், எஞ்சிய வார்த்தைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள் என்று பழனிசாமி தெரிவித்தார்.
திமுக தங்கள் குடும்பத்தை மட்டும் தான் பார்க்கும்
தொடர்ந்து பேசிய அவர், சாக்கடைக்கு சமமாக தான் பேசுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அவர்கள் தான் சாக்கடையில் இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். எம்ஜிஆர் தோற்றுவித்த தங்கள் கட்சி புனிதமான இயக்கம் என கூறிய அவர், திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி என்று தெரிவித்தார்.
அதேபோல், தன்னுடைய உடல்நலனையும் பாராமல், எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணியை, மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து ஜெயலலிதா தொடர்ந்ததாகவும் பழனிசாமி கூறினார். அவர்கள் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் என்றும், அங்கு வாரிசுகள் கிடையாது, நாம் தான் வாரிசுகள் என்று குறிப்பிட்டார். அதிமுக தலைவர்கள் மக்களுக்காக உழைத்ததாகவும், ஆனால், கருணாநிதியோ குடும்பத்தைத் தான் பார்த்தார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், திமுகவை பொறுத்தவரை, அந்த குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறு யாரும் மாநிலத்திலோ, மத்தியிலோ உயர்ந்த பதவிக்கு வர முடியாது என்று பழனிசாமி விமர்சித்தார். ஜனநாயகம் உள்ள கட்சி என்றால் அது அதிமுக தான் என்றம் அவர் சுட்டிக்காட்டினார்.
“டெல்டா விவசாயிகள் மீது ஸ்டாலினுக்கு உண்மையான அக்கறை கிடையாது“
முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் ஸ்டாலின் இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு நீர் வழங்குவதற்கு எதிரானவரோடு வந்து பிரசாரம் செய்கிறார் என்றால், ஸ்டாலின் விவசாயிகளுக்கு நன்மை செய்பவரா என கேள்வி எழுப்பினார்.
அதேபோல், பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகள் கோரிக்கை வைத்த பாசனத்திற்கான தண்ணீரை அங்கு வந்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்காமல், தான் அறிக்கை விட்டு கேட்டபோது, நான் தண்ணீர் கேட்க செல்லவில்லை, கூட்டணி கூட்டத்திற்கு தான் சென்றேன் என்று ஸ்டாலின் தெரிவித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதனால், தண்ணீர் இல்லாமல், 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகியதாகவும், அதற்கும் அவர் நிவாரணம் வழங்கவில்லை என்றும், ஸ்டாலினுக்கு விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கிடையாது என்றும் அவர் விமர்சித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















