Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
மக்களுக்கு சேவை செய்ய எதற்கு காசு கொடுக்க வேண்டும். இந்த நாட்டில் இருக்கும் பிரச்னைகள் எல்லாம் மக்களுக்கு நீங்கள் தந்தது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டு அதிக கடன் சுமையை நம் மீது ஏற்றி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நாதக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய சீமான், “நாங்கள் மக்களுக்கு காசு கொடுப்பதில்லை. மக்களுக்கு சேவை செய்ய எதற்கு காசு கொடுக்க வேண்டும். உனக்கு நல்லது செய்ய வந்து பணத்தை கொடுத்து இதை வச்சுக்க, நான் உனக்கு நல்லது செய்வேன் என சொல்வது ரொம்ப புதுமையா இருக்கு. பீகாரில் ஒரே தவணையாக ரூ.10000 ஆயிரம் தேர்தலுக்கு முன்பாக மக்களின் வங்கி கணக்கில் போட்டார்கள். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் 3 தவணையாக பிரித்து பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம், மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம், ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் என வழங்குவார். புதுச்சேரியில் பாஜக என்ன செய்ய காத்திருக்கிறதோ என தெரியவில்லை.
எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல. இதையெல்லாம் பார்த்தால் கள்ள நோட்டு அடிக்கிறவன் கூட பயந்து விடுவான். கடனை வாங்கி வாங்கி மக்களுக்கு அப்பப்ப 5,10 ஐ கொடுத்து ஏமாற்றுகிறார்கள். குதிரைக்கு லாடம் கட்டி விட்டு அதிக தூரம் ஓட வைப்பது போல மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டு அதிக கடன் சுமையை நம் மீது ஏற்றி வைத்து விட்டு சென்று விடுவார்கள். இந்த ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்.
இந்த நாட்டில் இருக்கும் பிரச்னைகள் எல்லாம் மக்களுக்கு நீங்கள் தந்தது. அதனை தீர்ப்பதற்காகவே நாம் தமிழர் கட்சி வந்தது. நான் வந்து அதை சரி செய்வேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் வந்தபோது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்து விடுகிறது. இன்னொருத்தர் (விஜய்) வந்து இருக்காரு அவருக்கு எதுக்கு வந்து இருக்கோம் என்றே தெரியவில்லை. சின்னம் எதுன்னு கேட்டால் என்னுடைய முகம் என காட்டுகிறார்.
நான் மட்டும் கையேந்தினால் பிச்சை என சொல்கிறார்கள். ஆனால் நாடே கையேந்தினால் அது இலவசம் என கூறுகிறார்கள். அதை திட்டம் சொல்வார்கள். உண்மையில் அது பலகோடி நட்டம் என்பதே சரியாகும். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயத்தின் கதையை முடித்து விட்டார்கள். அதை இப்போது 150 நாட்களாக உயர்த்தி விட்டார்கள். கலைஞர் கருணாநிதி ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும்போது முன்வரிசையில் அமர்ந்து கைதட்டியதில் நானும் ஒருவன். அடுத்த 5 ஆண்டில் இன்னொரு ஆட்சி வந்தது. ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தார்கள். கேட்டால் வளர்ந்து விட்டோம் என கூறுகிறார்கள். அதற்கடுத்த ஆட்சி வரும்போது இலவச அரிசி என கூறினார்கள். ரூ.1 கொடுத்து அரிசி வாங்க முடியாத அளவுக்கு மக்களை மாற்றி விட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.





















