MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி ஏன் போட்டியிடவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளார்.

செந்தில் பாலாஜி இருப்பதால் கரூரை பற்றி தனக்கு கவலையில்லை என்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலையில் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கரூர் ராயனூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசும்போது, திமுகவின் திட்டங்கள், சாதனைகள், திமுகவின் வெற்றி குறித்தும் சிலாகித்து பேசியுள்ளார்.
சாதிக்க நாங்கள் ரெடி
”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது; சாதிக்க நாங்கள் ரெடி. 10 ஆண்டுகாலமாக உரிமைகளை அடகுவைத்த அதிமுக ஆட்சியை நாம் அகற்றி 2021இல் ஆட்சி அமைத்தோம்; எந்தவொரு மாநில அரசும் இந்தளவு சாதனை செய்ய முடியாது என சொல்லும் அளவுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செய்து காட்டினோம்.
கரூரை பற்றி கவலையில்லை
செந்தில் பாலாஜி இருப்பதால் கரூரை பற்றி எனக்கு கவலையில்லை; செந்தில் பாலாஜியின் புகுந்த வீடுதான் கோவை; பிறந்த ஊரான கரூரை மறக்கமாட்டார்; இந்த முறை கரூர், கோவை மட்டுமின்றி தமிழ்நாடே நம்வசம் தான்.
அதிமுகவின் அழிவு சக்தி பழனிசாமி
அதிமுகவை நான் உடைக்க முயற்சித்ததாக அபாண்டமாக பேசுகிறார்; அதிமுகவின் அழிவு சக்தி பழனிசாமி. தலைமைப்பண்பு, அடக்கம் இல்லாமல், சொந்த கட்சியினரை துரத்திவிட்டு இப்படி வயிறெரிந்து பேசுகிறார். தடம் மாறி கூட்டணி வைத்துள்ள பழனிசாமி செய்துள்ள துரோகங்களை எண்ணிப் பாருங்கள். திராவிட இயக்க கொள்கையில் இருந்து அதிமுக விலகுவதால்தான் தாய் கழகமான திமுகவுக்கு திரும்புகிறார்கள். நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி அடகுவைத்தார். திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை மொத்த அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி சசிகலா வரை துரோகம் செய்து முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.




















