KN Nehru: திருச்சி மேற்கில் தேர்தல் பணிமுனை அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!
திருச்சி மேற்கில் திமுக-வின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 வாரங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் திமுக செயலாற்றி வருகிறது.
தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு:
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி திமுக கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்த தொகுதியில் மீண்டும் வெற்றியைக் கைப்பற்ற திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் (திமுக) தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு புதிய தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிர்வாகிகளுக்கு ஆலோசனை:
தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் இந்த தொகுதி மீது தனி எதிர்பார்ப்பு உள்ளது.
9 தொகுதிகள்:
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ( தனி) தொகுதிகள் உள்ளது. திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது குறித்து கே.என்.நேரு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திமுக கோட்டை:
தமிழக அரசியலில் எப்போதுமே திருச்சி முக்கியமான இடத்தை அலங்கரித்து வருகிறது. திமுக-வின் முக்கிய தலைவராக திகழும் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியை சேர்ந்தவர்கள். இரண்டு முக்கியமான அமைச்சர்கள் வசிக்கும் திருச்சி முழுவதும் வெற்றிக்கனியைப் பறிக்க திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.




















