மயிலாடுதுறை: யாரிடம் புகார் சொல்வது? மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள முடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு..!
மயிலாடுதுறை மன்னம்பந்தல் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களில் நேரக் குளறுபடியாக உள்ள நிலையில் சரி செய்ய மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவிவருகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களில் நேரக் குளறுபடிகள் ஏற்பட்டதால், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நான்கடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி (தனி) ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 3,439 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன.
அங்குள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பான அறைகளில் தொகுதிகள் வாரியாக இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உள்ளிட்ட நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த அறைகளைச் சுற்றி 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் இந்த நேரலை காட்சிகளைப் பார்ப்பதற்காக, கல்லூரி வளாகத்தில் எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேமரா நேரக் குளறுபடி: வேட்பாளர் அதிர்ச்சி
இந்நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், சீர்காழி (தனி) தொகுதி வேட்பாளருமான கோபிநாத், தனது முகவர்களுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து கண்காணிப்புத் திரைகளைப் பார்வையிட்டார். அப்போது, சிசிடிவி கேமரா பதிவுகளில் நேரங்கள் மாறுபட்டு ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வெளியே உள்ள டிஸ்ப்ளேயில் காட்டிய நேரத்திற்கும், உள்ளே இருக்கும் கேமராக்களில் ஓடிக்கொண்டிருந்த நேரத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. குறிப்பாக, சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பின்புறக் கேமராக்கள் சுமார் 3 மணி நேரம் பின்தங்கி ஓடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து அங்கிருந்த கேமரா தொழில்நுட்ப வல்லுநர்களிடமும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் வேட்பாளர் கோபிநாத் கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக மற்றும் பாமக முகவர்களும் அங்கு திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. அதில் நேரக் குளறுபடி ஏற்பட்டால் ஏதேனும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. இதனை ஏன் அதிகாரிகள் சரி செய்யவில்லை?" என அவர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்
மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பு
இது குறித்து விளக்கம் பெற சீர்காழி தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொண்டபோது, "இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம்தான் (ஆட்சியர்) கேட்க வேண்டும்" எனப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, முகவர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தின் செல்போனைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரது செல்போன் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்ததால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முகவர்கள், அங்கிருந்த தேர்தல் உதவி நடத்தும் அலுவலர் சபிதா உள்ளிட்ட அதிகாரிகளிடம், "மாவட்டத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியையே தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், நாங்கள் யாரிடம் போய் புகார் சொல்வது?" என முழக்கமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
வாக்குவாதத்தின் போது முகவர்கள் மேலும் ஒரு குற்றச்சாட்டினை முன்வைத்தனர். "நேற்று மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது ஏஜெண்டுகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால், இன்று கேமராக்களில் குளறுபடி இருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டியதும், உடனடியாக செல்போன் பயன்படுத்தக் கூடாது எனப் புதிய கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கின்றனர். இது எங்களைப் போன்ற முகவர்களைக் கண்காணிப்பில் இருந்து அச்சுறுத்தும் செயல்" என்று குற்றம் சாட்டினர்.
உடனடி நடவடிக்கை கோரிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிசிடிவி கேமரா குளறுபடிகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் வந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தவெக, அதிமுக, பாமக கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் மன்னம்பந்தல் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முகவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், கேமரா நேரம் சரியாக ஓடாதது குறித்த அச்சம் வேட்பாளர்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















