மயிலாடுதுறையில் பரபரப்பு...மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு...!
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற, குஜராத் மாநிலத்திலிருந்து ஒரு உதவி தளவாய் தலைமையில் 80 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தமிழகத்தில் எதிர்வரும் 2026- ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையமும் காவல்துறை நிர்வாகமும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையினர் இன்று வருகை தந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்திலிருந்து வருகை தந்து 80 வீரர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு உதவி தளவாய் (Assistant Commandant) தலைமையில் மொத்தம் 80 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடி பகுதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்த வீரர்கள், செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். படைவீரர்களுக்கு தங்குமிடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட இதர வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வீரர்களுக்கு எஸ்.பி வழங்கிய அறிவுரைகள்
இந்தச் சந்திப்பின் போது, தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
*செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை: தேர்தல் களத்தில் நடுநிலையோடும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
* பதற்றமான வாக்குச்சாவடிகள்: மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்புப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் அங்கிருக்கும் சவால்களைக் கையாளுதல் குறித்து விளக்கப்பட்டது.
*வாக்கு இயந்திரப் பாதுகாப்பு: வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வது மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அவற்றை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் (Strong Room) ஒப்படைக்கும் வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
*கொடி அணிவகுப்பு: பொதுமக்களிடையே தேர்தல் குறித்த அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் கொடி அணிவகுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி
வாக்குப்பதிவு நாளன்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் மாநில காவல்துறையினருடன் இணைந்து இந்த மத்திய பாதுகாப்புப் படையினர் முக்கியப் பங்காற்றுவார்கள். இதன் மூலம் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய பாதுகாப்புப் படையின் உதவி தளவாய் தர்ஷன் சிங், மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணபிரபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






















