![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: தாய்மார்களே! 2 நிமிசம் கொஞ்சம் உட்காருங்க, போகாதீங்க - பாஜக கூட்டத்தில் கெஞ்சிய நிர்மலா!
அம்மா தாய்மார்களே! 2 நிமிசம் உட்காருங்க. முடிச்சிடுறேன்” என்று பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்த பெண்களிடம் கெஞ்சி தனது உரையை தொடர்ந்து பேச தொடங்கினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
![Watch Video: தாய்மார்களே! 2 நிமிசம் கொஞ்சம் உட்காருங்க, போகாதீங்க - பாஜக கூட்டத்தில் கெஞ்சிய நிர்மலா! lok sabha election 2024 Union Minister Nirmala Sitharaman pleaded with womens came to the BJP rally - watch video Watch Video: தாய்மார்களே! 2 நிமிசம் கொஞ்சம் உட்காருங்க, போகாதீங்க - பாஜக கூட்டத்தில் கெஞ்சிய நிர்மலா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/13/e1ec3f28dbf824080229636ce5f793be1712991659392571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிதம்பரத்தில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவு திரட்டினார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கியபோது, அங்கு கூடியிருந்த கூட்டம் வெளியேற தொடங்கியது. மேடையில் இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அம்மா தாய்மார்களே! 2 நிமிசம் உட்காருங்க. முடிச்சிறேன்” என்று பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்த பெண்களிடம் கெஞ்சி தனது உரையை தொடர்ந்து பேச தொடங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதற்காக ஓசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிபேட்டில் இறங்கி கார் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
இளைஞர்களை ஏமாற்றி போதை வசப்படுத்துவதாகவும், போதை பொருள்களை கொண்டு வரும் ஒவ்வொருவரும் அழிந்து சாவார்கள் என சாபம் விட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் பேசியதாவது, ”மக்களுக்கு முன்னால் வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வேண்டும். பிரதமர் மோடி 10 ஆண்டு பிரதமராக இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். அதுபோல் குஜராத் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். பெண் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். நமது ஆதரவை படித்த பட்டதாரி பெண் வேட்பாளருக்கு கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது. அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. 60 கிலோ மீட்டர் தூரமுள்ள கல்லகம் - மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 1025 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதுச்சத்திரம் ரயில் நிலையம் அரியலூர், சிதம்பரம் போன்ற ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் மூலம் புதுப்பிக்க திட்டம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளைப் போல மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய உதவி செய்யப்படும்.
திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. அவர்கள் ஊழலுக்கு பெயர் போனவர்கள் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைகற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள். அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் பாரத நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து ஐந்தாவது நிலைக்கு சென்ற பாரதத்தை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் காப்பாற்றி இருக்கிறார். இன்றைக்கு மேலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
உலக அளவில் இளைஞர்கள் செய்யக்கூடிய வேலையை நமது இளைஞர்கள் சென்னையில் செய்யும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தாய்மார்களே கொஞ்சம் உட்காருங்கள். சிறிது நேரத்தில் பேசி முடித்து விடுகிறேன்.
மக்கள் பணிகளை செய்ய நேரமில்லை. ஆனால் போதைப் பொருள்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் வசப்படுத்துகிறது. திமுக ஆதரவோடு இவை செய்யப்படுகிறது. இந்தத் தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப் பொருள்களைக் கொண்டு வரும் ஒவ்வொருவரும் அழிந்து சாவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்கணும் என்று யோசித்து வையுங்கள்.
வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்கிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்? மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்” என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)