Jayakumar: நான் MLA ஆவேன்.. செங்கோட்டையன் கண்ணீர் வடிப்பார்.. ஜெயக்குமார் சவால்!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் ஜெயிப்பதைக் கண்டு தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆனந்த கண்ணீர் வடிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவாக் விடுத்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக சுழன்று வருகிறது. திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை.
தவெகவை வைத்து அதிக சீட் பெற்ற கட்சிகள்
இப்படியான நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், தமிழக வெற்றிக் கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்தது. ஆனால் அக்கட்சி திமுகவுடன் இணைந்து விட்டது. இதனால் தனித்து போட்டியிட தவெக தயாராகி விட்டதா?” என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைக்கிறது. சில மன மாற்றங்கள் வந்திருக்கிறது. எங்களால் அவர்களுக்கு பயன் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தவெகவுடன் இணைந்து விடுவோம் என சொல்லி கூடுதல் சீட்டுகளைப் பெற்றுள்ளது. தவெக தனித்து போட்டியிடுமா அல்லது வலிமையான கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என கூறினார்.
செங்கோட்டையனுக்கு ஜெயகுமார் சவால்
தொடர்ந்து அவரிடம், “விஜய் பத்திரிக்கையாளரை சந்திக்க திராணி இல்லாமல் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் அக்கட்சி அதிமுக பக்கம் திரும்பியுள்ளது” என விமர்சனம் செய்தது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “ஜெயக்குமார் வேண்டுமானால் நம்முடைய அணிக்கு வரலாம். அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை. அவரின் மகனுக்கு தான் சீட் கொடுக்கப் போகிறார்கள். அவர் நல்ல நண்பர். அவரின் கருத்துக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் அவரது மனதில் தோன்றும் கருத்துகளை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடாது. என்றைக்கும் தனித்து நின்று முதலமைச்சராகும் சூழலில் தான் விஜய் இருக்கிறார். மற்றவர்கள் வாக்கு கேட்டு வரும் அளவுக்கு அவர் இல்லை. அனைவரின் மனநிலையை புரிந்துக் கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் , “அருமை அண்ணன் செங்கோட்டையனும், நானும் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் அவர் எப்போது ஆரூடம் பார்க்கும் ஜோதிடர் ஆனார் என தெரியவில்லை. நிச்சயமாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் எம்.எல்.ஏ., வேட்பாளராக நின்று ஜெயிப்பேன். அதைப் பார்த்து செங்கோட்டையன் ஆனந்த கண்ணீர் வடிப்பார்” என பதிலடி கொடுத்துள்ளார்.





















