OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
அதிமுக-வில் வாசல் திறந்தே இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கான அழைப்பாக பார்க்கப்படுவதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணி:
திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியையும் வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களாகவே நடவடிக்கை எடுத்து வந்தார். அதன்பலனாக, கடந்த வாரம் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கட்சியில் இணைந்தனர். இதனால், அதிமுக கூட்டணியும் தற்பாேது வலுவடைந்துள்ளது.
ஓ.பி.எஸ்.க்கு மறைமுக அழைப்பு:
எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்த தினகரனே, கூட்டணிக்குள் வந்துவிட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் எப்போது கூட்டணிக்குள் வருவார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அவருக்கு அதிமுக கூட்டணியில் உள்ள தினகரன் அழைப்பு விடுத்த நிலையில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, மதுரையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்த அவர், இன்னும் வரக்கூடிய தலைவர்களுக்கு எல்லாம் அதிமுக வாசல் திறந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், அதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தலைவர்களில் தற்போது எஞ்சியிருக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே.
ஆதரவும், எதிர்ப்பும்:
ஏனென்றால், செங்கோட்டையன் தவெக-விற்கும், வைத்திலிங்கம் திமுக-விற்கும் தாவிவிட்டனர். எஞ்சியவர்களில் மக்கள் மத்தியில் அறிந்த முகம் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே ஆவார். அவர் யாருடன் இணையப்போகிறார்? என்பதே தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அவரை கூட்டணிக்குள் கொண்டு வர சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால், அதிமுக அலுவலகத்தின் உள்ளே ஆதரவாளர்களுடன் சென்றது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது போன்ற விவகாரங்கள் காரணமாக அவரை கூட்டணிக்குள் சேர்க்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
யார் பக்கம்?
எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக இருந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் தற்போது தினகரன் வருகையால் ஓரளவு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவராக தினகரன் இருந்தாலும், தென் மாவட்டங்களிலும் தினகரன் செல்வாக்கு மிக்கவர் என்பதால் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அவரால் ஈடு செய்யப்படும் என்று கருதப்படுகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்குள் இடம்பெறாவிட்டாலும் தினகரனை வைத்து ஈடு செய்யவே இபிஎஸ் விரும்புவார்.
அவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளே வந்தால் அவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்? அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எத்தனை தொகுதிகள் அளிக்கப்படும்? என்பது மிகப்பெரிய கேள்வியாகவும் உள்ளது. இன்னும் சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் யார் பக்கம்? என்பது தெரிய வரும்.
ட்ரெண்டிங் செய்திகள்



















