"முதுகில் குத்திய அதிமுக" - விஜய் கட்சியில் இணைந்த தனபால் மகன்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றொரு கட்சிக்கு செல்லும் காட்சிகளும் அரங்கேறி கொண்டிருக்கிறது.

அதிமுக முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் 4 முனை போட்டி, மறுபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றொரு கட்சிக்கு செல்லும் காட்சிகளும் அரங்கேறி கொண்டிருக்கிறது. அப்படியான நிலையில் அதிமுக முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது பற்றி கடந்த 6,7 மாதங்களாகவே நான் யோசித்து வந்தேன். ஆனால் என் தந்தையின் உடல்நிலை காரணமாக கொஞ்சம் முடிவெடுக்க தாமதமாகி விட்டது. அதிமுகவில் நடந்த சூழ்நிலைகளால் என் குடும்பம் மிகுந்த மனவேதனை அடைந்தோம். அதன் காரணமாக இன்றைக்கு தவெகவில் இணைந்துள்ளேன்.
என்னுடைய அப்பா தனபாலின் எம்.எல்.ஏ., பதவிகாலம் பிப்ரவரி 20ம் தேதியுடன் முடிவடைந்தது. நான் தவெகவில் இணைந்தது என் அப்பாவுக்கு சம்மதம் தான். என் குடும்பத்தில் ஒரு மன வருத்தம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் என் அப்பா தனபாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சாதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உறவினர்கள் வந்து பார்ப்பார்கள். கட்சி ரீதியாக எடுத்துக் கொண்டால் தலைமை அல்லது அடுத்தக்கட்ட நிர்வாகிகள் வந்து பார்ப்பார்கள். ஆனால் என் அப்பாவை ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இந்த சம்பவங்கள் எங்களை வெகுவாக பாதித்து விட்டது. அதிமுகவில் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட 4,5 பேர் தான் அக்கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். என் அப்பா மாதிரியான சீனியர் நபர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. செங்கோட்டையன் மாதிரி இன்றும் மன வருத்தத்துடன் அந்த கட்சிக்குள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களும் நேரம் கிடைத்தால் மாற்றுக் கட்சியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் என் அப்பா அதிமுகவை விட்டு கடைசி வரைக்கும் வரமாட்டார். அவர் கட்சியின் விசுவாசி என லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், கட்சியில் உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது எப்படி உங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என எப்படி சொல்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு, நீங்கள் கட்சிக்குள் இருந்தால் தான் தெரியும். வாய்ப்பு கொடுத்ததால் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது கிடையாது. அதன்பிறகு நான் முதுகில் குத்தப்பட்டேன். அதேசமயம் என் அப்பாவுக்கு நிறைய மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது எனவும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.





















