நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்.! தமிழகத்தில் எத்தனை பேர் களத்தில்.? வெளியான லிஸ்ட் இதோ...
TN Assembly Election Nomination : சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையோடு நிறைவடைந்துள்ளது. வருகிற 9ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கு முன்பதாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று மாலையோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. வெறும் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் கிடைத்தது. மார்ச் 30-ந் தேதி முதல் நாளில் 573 வேட்புமனுக்களும், கடந்த 2-ந் தேதி 1,361 வேட்பு மனுக்களும், 3-ம் நாள் 3,430 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
4000 வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று இதுவரை சுமார் 4,000 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் எனவும், அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக களம் காணும் மொத்த வேட்பாளர்கள் முழு விவரம் தெரிய வரும். சரியாக பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக அறையின் பிரதான வாயில் மூடப்பட்டுவிடும்.
3 மணிக்குள் அவரது அலுவலகத்திற்குள் வந்துவிட்டவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். பிற்பகல் 3 மணிக்கு மேல் அலுவலகத்திற்குள் ஒருவருக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி பெற்றுக் கொள்வார். இதனையடுத்து நாளைய தினம் வேட்புமனு பரிசீலனை நடைபெறுவுள்ளது.
9ஆம் தேதி இறுதி பட்டியல்
அதே நேரம் ஒரு சில தொகுதிகளில் அதிக வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எனவே ஒரே நாளில் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வேட்புமனு பரிசீலனைக்காக கூடுதல் நாட்களை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், பொதுவாக ஒரே நாளில் வேட்புமனு பரிசீலனையை முடித்து விடுவார்கள்.
அதன்படி 7-ந் தேதியன்றே தள்ளுபடியான வேட்புமனுக்களின் விவரங்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரி வெளியிட்டுவிடுவார். 9-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். 9-ந் தேதி மதியத்திற்குள் தமிழகத்தில் களம் இறங்கவுள்ள வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுவிடும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















