AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto 2026: அரிசி அட்டை கொண்ட குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களின் தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாட்டின் எதிர்க் கட்சியான அதிமுக 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலகத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியை நிறைவேற்ற மக்கள் தயாராகி விட்டார்கள் என்று கூறிய அவர், இன்றைய இறுதி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதில் மொத்தம் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
என்னென்ன?
அரிசி அட்டை கொண்ட குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.
அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையின்றி தரப்படும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்காக பரிசுத் தொகுப்பும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு 6 பாடங்கள்
வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஜந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கூறி இருந்தது என்ன?
- அனைத்து குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை அளிக்கப்படும்.
- குல விளக்கு திட்டம் என்னும் பெயரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் அமல்படுத்தப்படும்.
- வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
- மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்.
- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு இருந்தன.
ட்ரெண்டிங் செய்திகள்




















