டெல்லிக்கு அடிபணியும் எடப்பாடி.. எகிறி அடித்த கனிமொழி! - விருத்தாச்சலத்தை அதிரவைத்த தேர்தல் பிரச்சாரம்!
பாஜகவிற்கு முதல் கட்ட தோல்வி இதுதான்! இதற்குப் பிறகு நாடு முழுவதும் தோல்விதான் தொடரும்: விருத்தாச்சலம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

கடலூர் : பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி, அதன் பின்னால் ஒளிந்துகொண்டு தமிழகத்தின் உரிமைகளை பறிக்க பாஜக முயன்றதாக கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றஞ்சாட்டினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலாளரும் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து, கருவேப்பிலங்குறிச்சி கூட்ரோடு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.: என்னுடைய சகோதரி பிரேமலதா அவர்களுக்கு வாக்குக் கேட்டு, முரசு சின்னத்திலே வாக்களித்து வரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள இன்று வந்திருக்கிறேன். என்னுடைய மனம் மகிழ்ந்து இந்தத் தொகுதியிலே இன்று உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன். கேப்டன் அவர்கள் நின்று வெற்றிபெற்ற இந்தத் தொகுதியிலே அவருடைய துணைவியார், நம்முடைய பிரேமலதா அவர்கள், உங்களுடைய ஆதரவைக் கேட்டு நம்முடைய வேட்பாளராக இன்று நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் அத்தனை பேருக்கும் நம்முடைய சகோதரி பிரேமலதா அவர்களை நன்றாகத் தெரியும். எப்பொழுதுமே ஒரு தைரியமாக இருக்கக்கூடிய பெண்மணி. கேப்டன் எப்படி எதுவந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக, எதற்குமே பயப்படாத ஒரு மனிதராக, அதேநேரத்திலே தன் வாழ்நாள் முழுவதும் எளிமையான மனிதராக, மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய ஒரு மகத்தான மனிதராக அவர் வாழ்ந்தாரோ, அதே தைரியத்தோடு, எந்தக் கருத்தாக இருந்தாலும் தைரியமாக எடுத்துச் சொல்லக்கூடிய ஒருவராக நம்முடைய சகோதரி பிரேமலதா அவர்கள் இருக்கிறார்கள்.
என்னுடைய நீண்டநாள் தோழி, என்னுடைய குடும்பத்திலே ஒருவர் என்று சொல்லக்கூடிய ஒரு சகோதரி. அவருக்காக வந்து வாக்குக்கேட்கக்கூடிய இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி நிச்சயமாக பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து, மக்களுக்காகப் பேசக்கூடிய பிரேமலதா அவர்கள், உங்களுக்காகப் பேசக்கூடியவர், கூப்பிட்ட குரலுக்கு கேப்டன் அவர்கள் ஓடோடி வந்ததைப் போல, ஓடோடி வந்து, உங்களுக்கு என்ன தேவை என்பதை நிறைவேற்றித் தரக்கூடியவர்.
நம்முடைய முதமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள், அவரையும் ஒரு சகோதரியாகக் கருதக்கூடியவர். அதனால, இனிமே உங்க தொகுதிக்கு என்ன வேண்டுமென்றாலும், நமது முதலமைச்சரின் இன்னொரு சகோதரி இங்கே நிற்கிறார்கள், உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் அவர்கள் அதை செய்து தருவார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு நீங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய கூட்டணியிலே இருக்கக்கூடிய வேட்பாளர்கள், நம்முடைய பிரேமலதா அவர்களே, தமிழ்நாடு முழுவதும் போய் எல்லா மக்களையும் சந்தித்து எல்லோருக்காகவும் வாக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்று அவருக்கு வாக்குக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நம் கூட்டணியிலே இருக்கக்கூடியவர்கள் அத்தனைபேரும் மக்களைப் பார்த்து நம்முடைய கூட்டணிக்கு, திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு முதலமைச்சர் அஅண்ணன் தளபதி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும்போது, மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்ற பெருமையோடு, அந்த உரிமையோடு வந்து ஓட்டுக்கேட்கிறோம்.
ஆனால், மற்றவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எதிராகவே இருப்பவர்கள், எதிரணியிலே கூட்டணி அமைத்திருககிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னைக்கு 8 மணிக்கு பிரதமர் பேசுவார். என்ன சொல்லுவார்? நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று இருந்தோம். எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து அதை நிறுத்திட்டாங்கன்னு சொல்வாங்க. ஆனால், அதையெல்லாம் விட பெரிய பொய்..அவங்க நிறைய பொய் சொல்வங்க. அந்த பொய்யெல்லாம் கேட்டுக்கேட்டு, இதற்குமேலும் கேட்க முடியாதுன்னுதான் நம்ம சகோதரி அங்க இருந்து விட்டாப்போதுமென்று வெளியே வந்து நம்மோடு கைகோர்த்துக்கொண்டு இந்த மேடையிலே நின்று கொண்டிருக்கிறார்கள். அதனால, உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், நிறைய பொய் சொல்வார்கள்.
அப்படி பொய் சொல்லக்கூடியவர்கள் நேற்று என்ன நடந்தது என்றால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டுவர்றேன்னாங்க. நாடாளுமன்றத்தை கூட்டுகீறேன் என்றார்கள். நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கிட்டிற்கான மசோதாவைக் கொண்டுவரவில்லை. அத்தோடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை, மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவது. தமிழ்நாட்டில் என்ன நடந்தது? எல்லாரிடமும் பொதுவாக இப்போது உங்கள் வீட்டில் எத்தனை குழந்தைகள் என்றால், ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்பார்கள் இல்லையா..
10,15 என்றெல்லாம் இப்ப யாரும் தமிழ்நாட்டில் சொல்வதில்லை. ஏன்னா, நம்ம பிள்ளைகள் படிக்கணும். நல்லா இருக்கணும் அப்படிங்கறதுக்காக இரண்டு குழந்தையோடு நிறுத்திக்க ஆரம்பிச்சுட்டோம். ஆனால், வடமாநிலங்களில் யாரும் செய்வதில்லை. அதனால தான் இங்க நிறைய பேர் வேலைக்கும் வர்றாங்க. ஏன்னா.. அங்க வேலைவாய்ப்புகள் இல்லை, படிக்கறதுக்கான வாய்ப்புகள் இல்லை.. இங்க வர்றாங்க.
அங்க இருக்கக்கூடிய சூழல் என்னான்னா ஜனத்தொகை ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால அங்க இருக்கக்கூடிய மக்கள் தொகையையும், தமிழ்நாட்டில், கேரளாவில் இருக்கக்கூடிய மக்கள் தொகை எல்லாம் வச்சு கணக்குப் பார்த்தா, இன்னைக்கு தமிழ்நாட்டில் 39 எம்.பி இருக்கோம். அங்க 60,70 எம்.பின்னு ஒரு மாநிலத்தில் இருக்காங்க. நம்ம மக்கள் தொகையை வைத்து கணக்குப் பார்த்தால் நமக்குக் குறையும். 32 எம்.பி. ஆயிடுதுன்னு வச்சுக்கோங்க. அவங்களுக்கு எம்.பி.80லிருந்தோ, 60லிருந்தோ அதிகமாகும். 120ஆகக் கூட ஆகலாம். அப்படி இருக்கக்கூடிய ஒரு சூழலில், ஏன் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டில் ஜனத்தொகையைக் குறைத்தால், நாட்டிற்கு நல்லது என்று சொன்னார்கள். நம்ம அதை நம்பிக் குறைத்தோம். வீட்டிற்கு நல்லது. நம்ம பிள்ளைகள் நல்லாருப்பாங்கன்னு குறைத்தோம். அவர்கள் அதைச் செய்ய வில்லை. நல்ல அரசாங்கம் அங்கே இல்லை. அதனால, மக்கள் தொகை அதிமாயிருக்கு. மக்கள் கஷ்டப்படறாங்க. ஆனா.. நல்ல அரசாங்கத்தை நடத்தியதற்கு.. ஒரு பிள்ளை நன்றாகப் படித்தால், என்ன நல்ல மார்க் கொடுக்கணும். இவங்க நல்லா எழுதியிருக்க பிள்ளைக்கு பெயில் மார்க் கொடுக்கறாங்க. நமக்கு குறைக்கிறாங்க. தொகுதியைக் குறைச்சுட்டு, சரியான எழுதாத பிள்ளைகளுக்கு அதிக மார்க்கைக் கொடுத்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 எம்.பியைக் குறைப்போம்.
திடீர்ன்னு வந்து உள்துறை அமைச்சர் என்ன சொல்றாங்க.. எல்லோருக்கும் ஏத்துவோம். அப்படி ஏத்தினாலும் தமிழ்நாடு பாதிக்கப்படும். அவங்க எந்த மசோதாவை வேண்டுமானாலும் கொண்டுவர முடியும். நம்ம என்ன தமிழ்நாட்டில சொல்றோம்னா.. இருக்கறதுல எங்களுக்குக் கொடுங்க. 543 இடம் இருக்குல்ல. அதுல பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்க. இதுல நீங்க பெரிசு பண்ணி, 840ஆக மாற்றி, அப்புறமா இடஒதுக்கீடு கொண்டுவருவது என்பது மக்களை ஏமாற்றுவது. தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிப்பது.
அதனாலதான் நம்ம முதலமைச்சர் அவர்கள், மசோதா கொண்டு வந்த நாளிலேயே எல்லோரையும் கருப்புக்கொடி ஏற்றச்சொன்னார்கள். ஏன்னா.. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. நேற்று.. நம்முடைய இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை எதிர்க்கட்சிகளும் இணைந்து, ஒன்றாக நின்று, மோடியுடைய பில்லை, மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்திருக்கிறோம். இனிமேல் அவர்களுக்கு வரக்கூடிய தோல்விகளின் முதல்கட்டம் இதுதான். முதல் தோல்வி இல்லையா. இனிமே அதுதான் வரப்போகிறது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பார்க்கப்போகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரைக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. இனிமேலும் இல்லை.
அதுக்கப்புறம் நாடு முழுவதும் தோல்விதான் தொடரும். தமிழ்நாட்டிற்கு, தென்மாநிலங்களின் உரிமைகளை பறிக்க நினைத்தவர்களுக்கு நேற்று நாம் நாடாளுமன்றத்திலே சரியான பாடத்தை சொல்லித்தந்திருக்கிறோம். அதுவும் என்ன..பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறேன்னு சொல்லிட்டு, பெண்களுக்குப் பின்னாடி மறைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைத்தார்கள். ரெண்டு கண் இருக்கு. ஒரு கண்ணுக்கு கண்ணாடி போடுகிறேன். இன்னொரு கண்ணை குத்திவிடுகிறேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பெண்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும். தமிழ்நாட்டிற்கும் உரிமை வேண்டும். அதனால, இருக்கறதுல இடம் கொடுன்னு கேட்டோம். அதற்குக் கொடுக்கவில்லை. அவர்களுக்கு சரியான பாடத்தை நாம் சொல்லித்தந்திருக்கிறோம். இந்தத் தேர்தலையும் மீண்டும் அவர்களுக்கு நாம் சரியான பாடத்தைச் சொல்லித்தர வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
எதிரணியில இருக்கக்கூடிய எடப்பாடிக்கு தமிழ்நாட்டைப் பற்றிய கவலையே கிடையாது. அவருக்கு தன்னை காப்பாற்றிக்கிட்டாப்போதும்.மக்களைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, இங்க இருக்கக்கூடிய சகோதரிகளைப் பற்றி, யாரைப் பற்றியும் கவலை இல்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்கணும் என்றால், கொடுத்துவிடுவார். தான் முதலமைச்சர் ஆகணும். தான் நல்ல இடத்தில் இருக்கணும் அப்படின்னு அவர்களுக்கு அடிமையாகவே வாழ தயாராகிவிட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தேர்தலுக்கு அப்புறம் எங்கேயாவது கவர்னர் வேலைக்கு வேணும்னா போகலாம். தமிழ்நாட்டில் அவருக்கு இடமில்லை.
கவர்னர் வேலை ஒன்றும் கஷ்டமில்லை. நம்ம ஊர்ல ஒரு கவர்னர் இருந்தாரு. என்ன பண்ணுவாரு.. சட்டமன்றத்துக்கு உள்ள வருவாரு, சண்டைப்போடுவாரு வெளில போய்டுவாரு. கவர்னர் வேலை தேவை இல்லைன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கு திமுக. என்னைக்கு அந்த கவர்னர் வேலையை வீட்டிற்கு அனுப்பப்போறாங்கன்னு தெரில. இப்படி.. தமிழ்நாட்டிற்கு, இந்திய மக்களுக்கு துரோகம் செய்துகொண்டிருக்கக்கூடிய, தினமும் பொய் சொல்லிக்கொண்டிருக்கக்கூடிய கூட்டணி எதிரணில இருக்கு. எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றிப் பழக்கம் இல்லை. அதிமுக 2016ல் ஒரு தேர்தர் வாக்குறுதி கொடுத்தாங்க. இங்க இருக்கற சகோதரிகளில் யாருக்காவது நியாபகம் இருக்கா?
27வது பக்கத்தில.. குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்போன் கொடுக்கறேன்னு சொன்னாங்க. யாராவது வாங்கிருக்கீங்களா? நான் வர்ற வழில கேட்டேன். சகோதரி பிரேமலதாகிட்ட. தமிழ்நாடு முழுக்கப் போறாங்க உங்களுக்குத் தெரியுமா? அந்த செல்போனை வாங்கினவங்கன்னு. அவங்களும் தெரியாதுனனு சொல்லிட்டாங்க. அதனால... ஒரு வாக்குறுதியைக் கொடுத்துட்டு, தானும் மறந்து, மக்களையும் மறக்கச் செய்த பெருமை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கு. ஆனா..மக்களுக்குத்தந்திருக்கக்கூடிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தந்திருக்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள். ஆயிரம் ரூபாய் மகளிருக்கு உரிமைத்தொகை ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு முதலமைச்சர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
விருதாச்சலம் தொகுதியில் திமுக அரசு செய்த வளர்ச்சிப் பணிகள்: விருத்தாச்சலம் பெரியார் நகர் முதல் புதுக்கூரைப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 15 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மணவாளநல்லூர் மணிமுத்தாற்றின் குறுக்கே ரூ. 25 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் வழங்கிய புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகரம் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடலூர் – விருத்தாச்சலம் – சேலம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
விருதாச்சலம் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்: விருத்தாசலம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். ராஜேந்திரப்பட்டினம் - சோழதரம் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். விருத்தாசலத்தில் பீங்கான் தொழில் வளர்ச்சிக்காக ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும். நிலக்கடலைக்கான ஒருங்கிணைந்த மதிப்புச்சங்கிலி (Value Chain) உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















